ஒரு ஊரில் பிச்சைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் சென்று பிச்சை கேட்கும் பொழுது , "அம்மா பார்வதி பிச்சை போடு" என்று கேட்பான்.
அவனின் குரல் ஒரு முறை கைலாயத்தில் இருந்த பார்வதி தேவியின் காதுகளுக்குச் சென்றடைந்தது. அவள் அவன் மேல் இரக்கமுற்றாள். எனவே அவள் சிவனிடம் பிச்சைக்காரனுக்கு இரக்கம் காட்டும்படி சொன்னாள்.
உடனே சிவபெருமான், “இப்பிறவியில் பிச்சையெடுக்க வேண்டுமென்பது அவன் விதி. அந்த விதியைத் தம்மால் மாற்றமுடியாது என்று எவ்வளவோ சொல்லியும் அவன் மேல் செலுத்திய கருனையை மாற்றிக்கொள்ள பார்வதி தேவி தயாராக இல்லை.
"முடிந்தால் அவன் விதியை மாற்றிக் கொள்" என்று சிவபெருமான் சொன்னார்.
"நான் அவனை மிகப் பெரிய கோடீஸ்வரனாக மாற்றி, அவன் விதியை மாற்றிக் காட்டுகிறேன்" என்று சிவபெருமானிடம் சவால் விட்டாள் பார்வதி தேவி.
சிவபெருமானும் மனதுக்குள் சிரித்து கொண்டார்.
ஒரு வீடு முடிந்து அடுத்த வீட்டுக்கு அவன் செல்லும் வழியில் மூன்று மூடைகளில் தங்க கட்டிகளை போட்டாள் பார்வதி தேவி.
அந்த நேரம் பார்த்து, பிச்சைக்காரனுக்கு திடீரென்று, "ஒரு வேளை தான் குருடாகி விட்டால் என்ன செய்வது ?" என்ற எண்ணம் ஏற்பட்டது.
உடனே அவன் அருகிலிருந்த கம்பு ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு, இரு கண்களையும் மூடியபடி அடுத்த வீட்டை நோக்கிச் சென்றான்.
அவன் செல்லும் வழியில் பார்வதி தேவி போட்டிருந்த பொற்காசுகள் நிரம்பிய மூடைகள் அவன் காலில் இடறியது.
பிச்சைகாரன் கண்களை மூடிகொண்டு சென்றதால், அந்தப் பொற்காசு மூடைகளைக் கல் என்று நினைத்து, அதைக் கால்களால் உதைத்து விட்டு அடுத்த வீட்டிற்குச் சென்றான்.
அடுத்த வீட்டிற்குச் சென்ற பின் தன் கையில் வைத்திருந்த கம்பை தூக்கி எறிந்து விட்டு, மூடிய கண்களைத் திறந்து கொண்டு, குருடாகி விட்டாலும்கூட தன்னால் தொடர்ந்து பிச்சை எடுக்க முடியும் என்று தனக்குள் திருப்தியடைந்தான்.
அடுத்த வீட்டு வாசலில் நின்றுகொண்டு அவன் வழக்கம்போல், "அம்மா பார்வதி பிச்சை போடு" என்றான்.
விதி வலியது. அதை யாரும் வெல்லமுடியாது...! என்பதை பார்வதி தேவியும் தெரிந்து கொண்டார்.