அரசன் ஒருவன் தனது சிறு படையுடன் காட்டிற்குள் வேட்டையாடச் சென்றான்.
அப்போது வானில் ஒரு பருந்து இறைச்சித் துண்டத்தினைக் கவ்வியவாறே வேகமாய்ப் பறந்து சென்றது.
அந்தப் பருந்திடமிருந்து இறைச்சியைக் கைப்பற்றுவதற்காக பல பறவைகள் அப்பருந்தினைத் தாக்கியபடி பின் தொடர்ந்தன. எங்கெங்கோ பாய்ந்து பறந்தும் பருந்தால் மற்ற பறவைகளின் தாக்குதல்களைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இறைச்சித் துண்டைக் கீழே நழுவ விட்டது.
உடனே இன்னொரு பறவை அதனைக் கவ்விக் கொண்டது. எல்லாப் பறவைகளும் பருந்தை விட்டுவிட்டு இறைச்சித் துண்டினைக் கவ்விய பறவையைத் தாக்க ஆரம்பித்தன.
மீண்டும் விண்ணிலே பறவைகளின் போர்.
இறைச்சியை நழுவ விட்ட பருந்தோ நிம்மதியாகப் பறந்தது.
அரசனின் மனதில் ஒரு தெளிவு பிறந்தது.
இறைச்சித் துண்டினைப் பற்றியிருந்த பறவைத் தாக்கப்படுவதைப் போல உலகப்பொருட்களின் மீது பற்று வைத்திருப்பவர்களையே துன்பம் அதிகமாகத் தாக்குகிறது.
இறைச்சியை விட்டுவிட்ட பருந்து நிம்மதியாகப் பறப்பதைப் போல உலகப் பற்றை விட்டவர்கள் மன நிம்மதியை அடைகின்றனர்.