ஒரு டீக்கடைக்காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான். ஒரு முறை அந்த டீக்கடைக்காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது. கோபம் கொண்ட மல்யுத்த வீரன் டீக்கடைக்காரனை மல்யுத்தச் சண்டைக்கு அழைத்தான்.
அவர்கள் இனத்தில் மல்யுத்தச் சண்டைக்கு ஒருவன் அழைத்தால், அவன் அதை நிச்சயம் ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அது பெரும் அவமானம் என கருதப்படும். எனவே டீக்கடைக்காரனும் அதை ஒப்புக் கொண்டான்.
ஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்கப் போகிறோம் என பயந்தான். அறிவுரை வேண்டி ஒரு ஜென் துறவியை நாடினான்.
அவனது கதை முழுதும் கேட்ட அவர், " சண்டைக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன" என்று கேட்டார்.
" 30 நாட்கள்" என்றான் அவன்.
" இப்போது நீ என்ன செய்கிறாய்?" என்று பின்பு கேட்டார்.
" டீ ஆற்றுகிறேன்" என்றான் அவன்.
"அதையே தொடர்ந்து செய்" என்றார் அவர்.
ஒரு வாரம் கழித்து வந்தான் டீக்கடைக்காரன். "எனக்கு பயம் அதிகரித்தவன்னம் இருக்கிறது. என்ன செய்ய?" என்றான்.
இன்னும் ஈடுபாடோடு, இன்னும் வேகமாய் டீ ஆற்று" என்றார் ஜென் துறவி.
தன் பயத்தை எல்லாம் வேகமாக மாற்றி வெறித்தனமாய் டீ ஆற்றினான்.
இரண்டு வாரம் ஆனது. அப்போதும் அதே அறிவுரை.
போட்டி நாள் அருகில் வந்து விட்டது. டீக்கடைக்காரன் நடுக்கத்துடன் ஜென் துறவியிடம், "நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.
"போட்டிக்கு முன் ஒரு டீ சாப்பிடலாம் என நீ அவனைக் கூப்பிடு" என்றார் துறவி.
மல்யுத்த வீரன் குறிப்பிட்ட நாளன்று வந்து விட்டான்.
"வா... முதலில் டீ சாப்பிடு" என்றான் கடைக்காரன்.
"சரி" என்று அமர்ந்தான் வீரன்.
அவனது டீ ஆற்றும் வேகம் கண்டு மிரண்டு போய் விட்டான்.
இதற்கு முன்பும் அவன் டீ ஆற்றுவதை அவன் பார்த்திருக்கிறான், இப்போது என்ன ஒரு வேகம்!
ஒரு சாதாரண டீ ஆற்றும் விஷயத்திலேயே இவ்வளவு முன்னேற்றம் என்றால், போட்டிக்கு எந்த அளவு தயார் செய்திருப்பான் என எண்ணி போட்டியே வேண்டாம் என சென்று விட்டான்.