மூன்று தவளைகள் நண்பர்களாக இருந்தன.
ஒரு தவளை, மிகவும் சோம்பேறியாகவும்... தன்னால் எந்த வேலையும் செய்ய முடியாது என்றும் தாழ்வு மனப்பான்மையுடன் இருந்தது.
இரண்டாவது தவளை, எந்த விஷயத்திலும், எந்த முயற்சியும் செய்யாமல் எல்லாமே விதிப்படிதான் நடக்கும் என வேதாந்தம் பேசி வந்தது.
மூன்றாவது தவளையோ, எந்தக் காரியத்திலும் முயற்சியை விடாது.. விடா முயற்சி செய்து... வெற்றி பெற்று வந்தது.
ஒரு நாள் அவை மூன்றும் இருட்டில் போன போது கிணறு வெட்ட வெட்டியிருந்த பெரிய பள்ளத்தில் வீழ்ந்தன.
முதல் தவளை, 'ஐயோ பள்ளத்தில் வீழ்ந்து விட்டோமே... இனி வெளியே வரமுடியாதே' என அழுதவாறு இருந்தது.
இரண்டாவது தவளையோ, 'நாம் பள்ளத்தில் விழ வேண்டும் என்பது விதி, நாம் வெளியே வரவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் வெளியே வருவோம், இல்லையென்றால் நடப்பது நடக்கட்டும்’ என்று நினைத்து எதையும் செய்யாமல் இருந்தது.
மூன்றாவது தவளையோ, கண்டிப்பாக என் முயற்சியால் நான் வெளியேறுவேன் என்று கூறி தாவி... தாவி... குதிக்க ஆரம்பித்தது.
ஒரு கட்டத்தில், மண்ணின் பக்கவாட்டத்திலிருந்த ஒரு கிளையில் அது தாவி உட்கார்ந்தது. அடுத்த தாவலில் அந்தப் பள்ளத்தை விட்டு வெளியே வந்து விழுந்தது,
அதன் பின்னர் மூன்றாவது தவளை, தன் நண்பர்கள் நிலை குறித்து மனம் வருந்தி அங்கிருந்து சென்றது..