யூதர்களின் நகரம் ஒன்றில் பெரியவர்களின் கூட்டம் ஒன்று நடந்தது.
அந்தக் கூட்டத்தில் ஒரு பெரியவர், "நம் எல்லோருக்கும் ஏதாவது பிரச்சனைகள் வந்து கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். நாம் எல்லோரும் எதற்காகப் பிரச்சனைகளுக்குக் கவலைப்பட வேண்டும். யாராவது ஒருவரை நமக்குப் பதில் கவலைப்படச் சொல்வோம். அவரிடம் அதற்குத் தகுந்த கூலியை அளித்து விடுவோம். என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டார்.
"அருமையான திட்டம். நம் எல்லோருக்கும் பதில் யார் கவலைப்படுவார்கள்?" என்று கேட்டார் இன்னொரு பெரியவர்.
"நம் நகரத்தில் செருப்பு தைக்கும் ஏசல் என்பவர் இருக்கிறார். அவர் அனைத்து வேலைகளையும் கைகளால்தான் செய்கிறார். நமக்காக கவலைப்பட அவர் ஒருவருக்குத்தான் நேரம் உள்ளது. அதற்காக அவருக்கு நல்ல தொகை தந்து விடுவோம்." என்றார் மற்றொரு பெரியவர்.
எல்லோருக்கும் அவர் கருத்து சரியெனப்பட்டது.
அவர்கள் அனைவரும் கூட்டமாகச் சென்று ஏசலைச் சந்தித்தார்கள்.
அவரிடம் "எங்கள் எல்லோருக்கும் பிரச்சனைகள் ஏதாவது வந்து கொண்டே இருக்கிறது. நாங்கள் எங்கள் பிரச்சனைகளை உங்களிடம் வந்து சொல்வோம். எங்களுக்குப் பதில் நீங்கள் கவலைப்பட வேண்டும்." என்றார்கள்.
"உங்களுக்காக நான் கவலைப்படுவதற்கு எனக்கு என்ன தருவீர்கள்?" என்று கேட்டார் ஏசல்.
"பத்துப் பணம் தருகிறோம்." என்றார்கள் பெரியவர்கள்.
"ஒரு மாதம் முழுமையும் செருப்பு தைக்கும் எனக்கு இரண்டு பணம் கூலி கிடைக்காது. பத்துப்பணம் கிடைத்தால் நான் ஏன் கவலைப்பட வேண்டும்?" என்று கேட்டார் அவர்.