முன்னொரு காலத்தில் ஆங்கிரசர் என்றொரு முனிவர் இருந்தார். மிகவும் புகழ் பெற்ற அவரிடம் பல சீடர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஓரளவு ஞானம் பெற்றவர்களாக இருந்தனர்.
அந்தச் சீடர்களில் சிலர், பக்தியும், கடமையுணர்வும் கொண்டவர்கள். அவர்கள் மற்றவர்களை விட எளிதில் எதையும் புரிந்து கொள்ளக் கூடியவர்களாக இருந்தனர். அவர்களுடைய நற்பண்புகள் காரணமாக, மற்ற மாணவர்களால் அவர்கள் மதிக்கப்பட்டனர். ஆனால், அறிவுக் கூர்மையற்ற சிலர் மட்டும், அந்த நல்ல மாணவர்களிடம் மிகுந்த பொறாமை கொண்டிருந்தனர். குருவின் உபதேசங்களைப் புரிந்து கொள்ளும் திறன் தங்களிடம் குறைவாயிருப்பதை அவர்கள் மறந்துவிட்டனர்.
ஏனோ, குருவின் பாரபட்சமற்ற தன்மையில் அவர்களுக்குச் சந்தேகம். அவர் பக்தியுணர்வுடைய மாணவர்களுக்கு மட்டும் ரகசியமாக சில முக்கியமான அறிவைப் புகட்டுவதாக நினைத்துக் கொண்டனர்.
ஒருநாள் குருதேவர் தனித்திருந்த போது அவரிடம் சென்று, "ஐயனே! தாங்கள் பாடம் கற்பிப்பதில் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்று சந்தேகப்படுகிறோம். தேர்ந்தெடுத்த சிலருக்கு மட்டும் உங்கள் ஞானத்தின் முழுப்பலனையும் நீங்கள் வழங்குவதாய் கருதுகிறோம். ஏன் எங்களுக்கும் அந்த அறிவை அளிக்கக் கூடாது?'' என்று கேட்டனர்.
குருதேவர் அந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்தார். ஆனாலும், அமைதியாகப் பதிலளித்தார்.
"நான் உங்கள் அனைவரையும் ஒரே மாதிரிதான் மதித்து நடத்துகிறேன். யாருக்கும் தனிப்பட்ட முறையில் எந்தச் சலுகையும் காட்டவில்லை. உங்களில் சிலர் விரைவாக முன்னேறியிருந்தால், நான் சொல்கிறவற்றை அவர்கள் ஊன்றிக் கவனித்திருக்க வேண்டும். நீங்களும் அவ்வாறு முயன்று கற்பதை யார் தடுத்தது?'' என்று கேட்டார் அவர்.
ஆனால், மாணவர்கள் அவருடைய பதிலில் திருப்தியடையவில்லை. ஏதோ யோசனையில் ஆழ்ந்த குரு, "ரொம்ப சரி! குறைப்பட்டுக் கொள்கிறவர்கள் மீது நான் சிறப்புக் கவனம் செலுத்துகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை, நான் ஒரு சிறிய தேர்வு ஒன்றை நடத்துவேன். அதில் நீங்கள் தேர்ச்சியடைய வேண்டும்” என்றார்.
அதற்கு அந்த மாணவர்களும் சம்மதித்தனர்.
"தேர்வு இதுதான். நீங்கள் அடிக்கடி போய் வருகிற பக்கத்து கிராமத்துக்குப் போக வேண்டும். அங்கிருந்து மிகவும் தகுதியான, எல்லாவிதத்திலும் நிறைவான ஒருவரை நீங்கள் அழைத்து வர வேண்டும் அவ்வளவுதான்'' என்றார்.
இந்தத் தேர்வு மிக எளிதாக இருப்பதாக நினைத்து அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதில் தேறிவிட்டால், குருவின் சிறப்புக் கவனம் தங்கள் பக்கம் திரும்பி விடும் என்று நினைத்தனர். அவர்கள், தங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுத்து, தகுதியான ஒரு நபரைக் கண்டுபிடித்து அழைத்து வருவதற்காகப் பக்கத்து ஊருக்கு அனுப்பினர். ஆனால், அவனால் ஒருவரையும் அழைத்து வர முடியவில்லை. நிறைவான மனமுடைய ஒருவனைக் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு குற்றம் குறை இருக்கவே செய்ததால் அவன் திரும்பி விட்டான்.
அவன் நீண்ட நாட்கள் முயற்சித்தும் எந்தம் பலனுமில்லை.
அவன் குருவிடம் வந்து, "ஐயா, நான் தங்களிடம் இப்படிச் சொல்வதற்காக வருந்துகிறேன். அந்த ஊர் முழுக்கத் தேடிப் பார்த்துவிட்டேன். ஒரு நல்ல மனிதன் கூட எனக்குக் கிடைக்கவில்லை. ஒவ்வொருவரும் ஏதாவதொரு தவறைச் செய்தவர்களாகவே இருக்கின்றனர். எல்லாரும் கெட்டவர்கள்!'' என்றான் அவன்.
"அட! அப்படியா? இங்கே யார் மீது நீங்கள் குறை சொல்லிக் கொண்டிருக்கிறீர்களோ, அவர்களில் ஒருவ்சரை இங்கிருந்து அங்கே அனுப்புவோம்'' என்றார் குரு.
பிறகு, பக்தியும், கடமையுணர்வும் கொண்ட மாணவர்களில் ஒருவனை அழைத்து, "நீ பக்கத்து ஊருக்குச் சென்று மிகவும் கெட்டவரான ஒருவரை அழைத்து வா!'' என்றார் அவர்.
குருவின் கட்டளையை ஏற்று, அந்த அணியில் இருந்து ஒருவன் அடுத்த ஊருக்குச் சென்றான். சில நாளில் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தான்.
அவன், "ஐயா! என் பதில் உங்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கும். நான் அந்த ஊர் முழுக்கத் தேடி விட்டேன்; அங்கு ஒரு கெட்டவனைக் கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை'' என்றான்.
அவனுடைய கருத்தைக் கேட்டு, குறை கூறும் குழுவினர், உரத்த குரலில் சிரித்து ஆரவாரம் செய்தனர்.
ஆனால், அந்த மாணவன் தொடர்ந்து பேசினான், "எல்லாரும் ஏதாவதொரு நற்காரியம் செய்தவர்களாகவே இருக்கின்றனர். ஒரு நற்செயலும் செய்யாத ஒருவனை என்னால் காண முடியவில்லை'' என்றான்.
"நல்லது, கெட்டது; சரி, தவறு என்பதெல்லாம் இதில் இருந்து தான் தொடங்குகிறது. எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு நல்லதைக் காண்கிற போது உங்களுடைய அறிவு அதிகரிக்கிறது. எல்லாவற்றிலும் குற்றம் காண்கிறபோது அந்த அறிவு குறையத் தொடங்குகிறது. உலகம் மகிழ்ச்சியும், வருத்தமும் கலந்ததாகவே இருக்கிறது. அதில் இருந்து நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்ததே ஞானம். நேர்மறை மனோபாவம் உள்ளவர்கள் விரைந்து முன்னேறுகின்றனர். ஆனால், எதிர்மறை மனோபாவம் உள்ளவர்களால் மெதுவாகத்தான் செல்ல முடியும்” என்றார் அந்தக் குரு.
பின்னர் அவரே தொடர்ந்து, "குருவைப் பொறுத்தவரை, எல்லாருமே அவருக்குப் பிரியமானவர்கள் தான். ஒரு சீடன் விலகியிருப்பதாய் உணர்ந்தால் அது அவனுடைய தவறு. நீங்கள் எந்த அளவு என்னோடு ஒன்றாகயிருப்பதாக நினைக்கிறீர்களோ, அந்த அளவு உங்கள் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். குருவிடமும், கடவுளிடமும் முழுமையாகச் சரணடைந்து விட வேண்டும். அரைகுறையாய் சரணடைவது என்ற பேச்சுக்கே இடமில்லை!'' என்றார் குரு.
குறை சொன்ன மாணவர்கள் குருவிடம் மன்னிப்பு கேட்டனர்.