ஒரு அரசனுக்கு ஒரு நண்பன் இருந்தான். அரசன் மீது உயிரையே வைத்திருந்த அவன், அரசனுக்கு ஏதாவது ஒன்று என்றால் தாங்க மாட்டான். அரசனை யாராவது விமர்சித்து விட்டால் உடனே அவர்களை சிறையில் தள்ளி விடுவான். அரசனின் காலில் கல் தட்டினால், அந்தக் கல்லை அடித்து நொறுக்கி, அந்தச் சிதறல்களைப் பக்கத்து நாட்டில் கொண்டு போய் போட்டு வரச் சொல்வான். அடி முட்டாளாக இருக்கும் அவன் அரசன் மீது அப்படியொரு குருட்டு நட்புடன் இருந்தான்.
அவந்து நட்பைப் பாராட்டிய அரச்ன், அவனுக்கு முழு உரிமைகளையும் கொடுத்திருந்தான். அவன் என்ன சொன்னாலும் உடனே அதை அப்படியே நடைமுறைப்படுத்தி விடுவான். அரசவையில் இருந்த அறிவான மந்திரிகள் அரசனின் நட்பு தவறானது என்று சுட்டிக் காட்டியும் கேட்கவில்லை.
ஒருநாள் அரசன் மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது அவனது கழுத்து அரிக்கவே, சொறிந்து விடுவதற்காக கழுத்தில் கையை வைத்தான். மாம்பழச்சாறு கழுத்தில் ஒட்டிக் கொண்டது.
சிறிது நேரத்தில் கழுத்தில் ஈக்கள் மொய்க்கத் துவங்கியது.
அப்போது அந்த முட்டாளும் உடனிருந்தான்.
அரசனின் கழுத்தில் ஈக்கள் மொய்ப்பதைக் கண்ட அவனுக்கு வந்தது கோபம். உடனே யோசிக்காமல் "ஏ ஈக்களே! எங்கள் மன்னனின் கழுத்தில் சாக்கடையில் இருக்கும் நீங்கள் எப்படி அமரலாம்? உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது? என்றபடி ஆவேசமாகக் கத்தினான். அப்படியே ஈக்களை வெட்டித்தள்ள வாளை உருவினான். அவற்றை வெட்டுகிறோம் என்று மன்னனின் தலையையே வெட்டி வீழ்த்தினான்.
நல்ல நண்பர்கள் என்பதற்காக முட்டாளை அருகில் வைத்த அரசனின் நிலையை. நீங்கள் மட்டுமின்றி உங்கள் நண்பர்களும் அறிவானவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுடன் இருப்பவர்கள், தங்களுக்கு நம்பிக்கையானவர்கள் சொல்லும் கருத்தை அப்படியே நம்பி விடக் கூடாது. முழுமையாக ஆராய்ந்துதான் செயல்பட வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அரசனின் கதிதான் உங்களுக்கும்.