அறிஞர்கள் கூடியிருந்த ஒரு சபையில் மிகவும் சூரியனா அல்லது சந்திரனா? என்பது குறித்துப் பட்டிமன்றம் ஒன்று நடந்து கொண்டிருந்தது.
அங்கே பேசியவர்கள் பெரும்பான்மையினர் சந்திரனை விடச் சூரியனால்தான் உலகத்திற்கு அதிகப் பயன் உண்டு என்ற கருத்தையே வலியுறுத்திப் பேசினர்.
அப்போது பேசியவர்களை நையாண்டி செய்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்று முல்லாவுக்குத் தோன்றியது.
அவர் உடனே எழுந்து, “அறிஞர் பெருமக்களே, இங்கே நடந்த பட்டிமன்றம் தொடர்பாக எனது கருத்தைக் கூறலாமா?” என்று கேட்டார்.
இது பொதுமன்றம், இங்கு யாரும் தங்கள் கருத்தினை எந்தவிதத் தடையுன்றிக் கூறலாம். முல்லா அவர்களே உங்கள் கருத்தைக் கூறுங்கள் என்று அறிஞர் பெருமக்கள் கேட்டுக் கொண்டனர்.
“சூரியனைவிடச் சந்திரனால்தான் இந்த உலகத்திற்கு அதிகமான பயன் கிடைக்கிறது என்று நான் கருதுகிறேன்” என்றார் முல்லா.
“அது எவ்வாறு என்று சொல்லுங்கள்” என்று அறிஞர்கள் கேட்டனர்.
பகலில் நமக்கு இயற்கையாக வெளிச்சம் இருக்கிறது. அதனால் சூரியனுடைய உதவி நமக்குத் தேவையே இல்லை. இரவில் இருளாக இருக்கிறது. சந்திரன் இருளை அகற்றி நமக்கத் தேவையான ஒளியை இரவிலே அளிக்கிறது. அதனால் சந்திரன் தான் நமக்கு அதிகப் பயனை அளிக்கின்றது என்றார் முல்லா.
முல்லா தங்களைக் கேலி செய்கிறார் என்பதை உணர்ந்து அறிஞர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள்.