ஒரு சமயம், வியாசர் சாலை வழியே போய்க்கொண்டிருந்தார். அப்போது, வழியின் ஒரு புழுவைக் கண்டார். அப்புழு மிகவும் விரைவாக நகர்ந்து சாலையைக் கடக்க முயன்று கொண்டிருந்தது.
வியாசர் புழுவிடம், "ஏ புழுவே, ஏன் இத்தனை அவசரமாக ஓடுகிறாய்...?” என்று கேட்டார்.
அதற்குப் புழு, "இந்தப் பாதை வழியே வெகு தூரத்தில் வண்டிகள் விரைந்து வந்து கொண்டிருக்கும் அதிர்வு கேட்கிறது. அவை அருகில் வருவதற்குள், நான் இந்தச் சாலையைக் கடந்து மறுபுறம் சென்றுவிட வேண்டும். இல்லாவிட்டால் என் உயிருக்கு ஆபத்து, நான் வண்டிச் சக்கரத்தினடியில் சிக்கி நசுங்கிச் செத்து விடுவேன். ஆகவேதான், என்னிடம் இத்தனை அவசரம்..." என்றது.
உடனே வியாசர், "புழுவே ! நீயோ மிகமிக கீழான பிறவி ! உனக்கு இன்னும் பல நாள் தொடர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை ஏன் ? அதை விட நீ இறந்து போய்விடுவது நல்லது இல்லையா?” என்றார்.
அதற்குப் புழு, "மனிதன் பார்வையில், என் போன்ற புழுக்கள் கீழானப் பிறவியாக இருக்கலாம். ஆனால் நான் அப்படிக் கருதவில்லை. புழுவாக வாழ்வதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. அந்தச் சுகம் பற்றி மனிதனாகிய உனக்குத் தெரியாது. புழுவுக்கு மட்டும்தான் என்பதில்லை. எந்தப் பிறவியாக இருந்தாலும், அதற்கு என்று, சில சுகங்கள் உண்டு. அச்சுகங்களை அவையவைதான் உணர முடியும், அனுபவித்து மகிழ முடியும். ஆகவே, இந்தப் புழுப் பிறவியில் எனக்குக் கிடைத்துள்ள அந்தச் சுகங்களை முழுமையாக நான் அனுபவித்துவிடவே விரும்புகிறேன். இந்தப் புழுப் புறவி போய்விட்டால், அதில் அனுபவிக்காமல் இன்னும் பாக்கியிருக்கும் சுகங்களை, நான் அனுபவிக்காமலே போய்விடும் அலலவா ? ஆகவே தான் நான் உயிர்வாழ விரும்புகிறேன்..." என்றது.
வியாசர் ஆச்சர்யப்பட்டுப் போனார். தொடர்ந்து பேசிய புழு, தன்னுடைய முந்தைய பிறவிகளைப் பற்றியெல்லாம் கூறியது.
வியாசர் அப் புழுவின் நோக்கத்தைப் பாராட்டினார். புழுவுக்கு அவருடைய நல்லருள் கிட்டியது. அதன் பயனாக, அது பல நற்பிறவிகளை எடுத்து வாழ்ந்து, இறுதியில் உய்வு பெற்றது.
எந்தப் பிறவியாக இருந்தாலும், அது தன் உயிர் மீது ஆசை வைத்துத் தன்னைக் காத்துக் கொள்ளவே முயலும்.
இது இயற்கையின் நியதி.