காட்டில் மான் ஒன்று இறந்து கிடந்தது. அதை ஒரே சமயத்தில் சிங்கம் ஒன்றும், கரடி ஒன்றும் பார்த்தன.
கரடி, "நான் தான் முதலில் மானைப் பார்த்தேன்... ஆகவே அது எனக்குச் சொந்தம்” என்றது.
ஆனால் சிங்கமோ. "நான் தான் முதலில் பார்த்தேன்.ஆகவே இந்த மான் எனக்கேச் சொந்தம்” என்றது.
இரண்டும், செத்துக் கிடந்த மான் யாருக்குச் சொந்தம் என நீண்ட நேரம் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தன. அதனால் இரு மிருகங்களும் சோர்வு மேலிட மயங்கின.
அப்போது நரி ஒன்று அங்கு வந்து, இறந்து கிடந்த மானையும், அதற்காகச் சண்டையிட்டு மயங்கிக் கிடந்த சிங்கத்தையும், கரடியையும் பார்த்தது.
இதுதான் சமயம் என நரி மானைத் தின்றுவிட்டு ஓடிவிட்டது.
மயக்கம் தீர்ந்ததும் விழித்துக் கொண்ட கரடியும், சிங்கமும், நரி வந்து மானைத் தின்றுவிட்டுப் போனதை அறிந்தன.
"நாம் இருவரும் சமாதானமாய்ப் போயிருந்தால், மானைப் பங்குப் போட்டு சாப்பிட்டிருக்கலாம். நாம் சண்டையிட்டதால், இடையில் வேறு ஒருவன் புகுந்து நம்மை ஏமாற்றிவிட்டானே" என வருந்தின.