ஒருநாள் மான் ஒன்று புல் மேய்ந்துக் கொண்டிருக்கையில், வேடன் ஒருவன் கண்களில் பட்டது.
அவன் மானைக் கொல்ல, அம்பெய்தப் பார்த்தான்.
மான் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடியது. சிறிது தூரம் சென்றதும், ஒரு புதரைப் பார்த்து அதன் பின் ஓடி ஒளிந்தது.
மானைத் துரத்தி வந்த வேடன் அதைக் காணாது சுற்றும் முற்றும் தேட ஆரம்பித்தான்.
அவனிடமிருந்து தப்பிவிட்டோம் என்ற எண்ணத்தில்... புதரில் வளர்ந்திருந்த செடியின் இலைகளை அந்த மான் தின்ன ஆரம்பித்தது.
அப்போது அச்செடி, "மானே! நான் உன்னை வேடனிடமிருந்து காப்பாற்றியுள்ளேன்! ஆனால், நீ... எனது செல்வங்களான இலைகளை உண்ணுகிறாயே. தயவு செய்து சில நாட்களாவது அவை தாயான என்னிடம் இருக்கட்டும்" எனக் கெஞ்சியது.
ஆனால், அதைக் கேட்காத மான்... செடியின் இலைகளை உண்ணத் தொடங்கியது.
அப்போது, அதனால் சிறு சலசலப்பு உண்டாக, வேடன் மான் அங்கு ஒளிந்திருப்பதைப் பார்த்து விட்டான்.
அவன் அந்த மான் மீது அம்பை எய்திக் கொன்றான்.
தன்னைக் காத்த செடியின் செய்நன்றியை மான் மறந்ததால் மான் தன் உயிரையே இழக்க நேர்ந்தது.