ஒரு செல்வந்தர் ஜென் ஞானி சென்காய் என்பவரிடம் வந்து, "எங்களது தலைமுறையினர் தொடர்ந்து எப்போதும் செழிப்புடன் இருக்க ஏதாவது வாழ்த்தி எழுதிக் கொடுங்கள்'' என்று கேட்டார்.
சென்-காய் ஒரு காகிதத்தை எடுத்து, "தந்தை இறக்க, மகன் இறக்க, பேரன் இறக்க !'' என்று எழுதிக் கொடுத்தார்.
செல்வந்தர் திடுக்கிட்டார். "எனது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கத்தான் உங்களிடம் வாழ்த்து எழுதித் தரக் கேட்டேன். ஏன் இப்படி எழுதி விட்டீர்கள் ?''என்று கோபப்பட்டார்.
சென்-காய் அமைதியாக, "இதில் குற்றம் ஒன்றும் இல்லை. உனக்கு முன் உன் மகன் இறந்தால், அது உனக்குத் துன்பத்தைத் தரும். உன் பேரன் இறந்தால், அது உனக்கும் உன் மகனுக்கும் பெரும் துன்பமாகும். உனது வம்சம் தலைமுறை தலைமுறையாக நான் குறிப்பிட்ட ஒழுங்கில் நடைபெற்று வந்தால், அதுவே இயற்கையான வாழ்வு முறை. அதைத்தான் எழுதி அளித்திருக்கிறேன்''என்றார்.
அந்தச் செல்வந்தர் மகிழ்ச்சியுடன் அவரை வனங்கிவிட்டுச் சென்றார்.