ஏழையான ஒரு சாதரணக் குடியானவனுக்கு செல்வந்தன் ஆகவேண்டும் என்று ஆசை. பணம் இல்லை என்றால் உலகில் மகிழ்ச்சி இல்லை என்பது அவனது எண்ணமாக இருந்தது. இரவும் பகலும் உழைத்து செல்வம் சேர்த்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ ஏங்கினான்.
ஒருநாள் இரவு அவன் தூங்கச் சென்றான். பணத்தை பற்றியே எண்ணி கொண்டிருந்ததால் கனவும் அதை பற்றியே வந்தது.
அந்த ஊரின் கோடியில் ஒரு ஆறு , அதன் அருகில் ஒரு ஆலமரம் . ஆலமரத்தின் அடியில் ஒரு முனிவர் அமர்த்திருந்தார். அவன் முனிவரின் முன்னால் பணிவுடன் நின்றிருந்தான். தனது காவி துணியால் சுற்றப்பட்ட மூட்டையிலிருந்து தேங்காய் அளவு உள்ள கண்களைக் கூசும் ஒளி கொண்ட வைரத்தை எடுத்து அவன் கையில் திணித்தார்.
இரு கைகளிலும் நிறைந்திருந்த அந்த வைரத்தைப் பரவசத்துடன் பார்த்த அவன் திடுக்கிட்டு விழித்தான். அப்போது காலை மணி நான்கு.
உடனே அவன் “இறைவா! அந்த வைரம் மட்டும் எனக்குக் கிடைத்தால், எனது வாழ்க்கையே மாறிவிடுமே...” என்று சொன்னான்.
அதிகாலையில் கண்ட கனவு பலிக்கும் என்று சிலர் சொன்னது அவனுக்கு நினைவு வந்தது . அதன் பிறகு அவனுக்குத் தூக்கம் வர வில்லை. எப்பொழுது விடியும் என்று கத்திருந்தான்.
விடிந்ததும் எழுந்த அவன், தான் கனவில் கண்ட ஆற்றங்கரை ஆலமரத்தைத் தேடி ஓடினான்.
அங்கே முனிவர் ஒருவர் காவித் துணியால் சுற்றிய மூட்டையுடன் அமர்த்திருந்தார். இந்தக் காட்சியை அவனால் நம்பமுடியவில்லை.
அவர் அருகில் சென்றதும், "குழந்தாய் வைரம் வாங்க வந்தாயா?" எனக் கேட்டார்.
அவன் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தான்.
தனது மூட்டையில் இருந்து மிக பெரிய வைரத்தை எடுத்து அவனிடம் கொடுத்தார்.
அதைக் கையில் வாங்கியதும், அவரிடமிருந்து விடை பெற்று வீட்டிற்கு ஓடி வந்தான்,
யாருக்கும் கிடைக்காத பெரிய வைரம், தனக்குக் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான். இதை விற்று என்ன செயலாம் எனத் திட்டமிடத் தொடங்கினான்.
திடீரென அவனுக்குள் ஒரு வெறுமை பரவியது. மனதுக்குள் ஒரு குரல் சொல்லியது.
மாபெரும் மகிழ்ச்சியை வழங்கும் வைரத்தை எந்த வருத்தமும் இல்லாமல் அந்த முனிவர் நமக்கு கொடுத்தார் என்றால்... அவரிடம் இதைக் காட்டிலும்... விலைமதிக்க முடியாத ஒரு பொருள் இருப்பதால் தான், இந்த வைரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் என்னிடம் கொடுத்திருக்கிறார். முனிவரிடம் இருக்கும் விலை மதிக்க முடியாத பொருள் என்னவாக இருக்கும்? என்று அறியும் ஆவலுடன் அவன் மீண்டும் ஆற்றங்கரைக்குச் சென்றான்.
அங்கு ஒளி பொருந்திய முகத்துடன் முனிவர் அமர்த்திருந்தார்.
அவர் அவனைப் பார்த்து, "வா குழந்தாய், இந்த வைரத்தைக் காட்டிலும், என்னிடம் இருக்கும் விலை மதிக்க முடியாத பொருள் உனக்கு வேண்டுமா?" என்று கேட்டார்.
அவனும் "ஆம்" என்பதைப் போலத் தலையசைத்தான்.
அவர், அவன் கையில் வைத்திருந்த அந்த வைரத்தை வாங்கி ஆற்றில் எறிந்தார்.
தனது மூட்டையில் இருந்து காவித்துணியை எடுத்து அவனிடம் கொடுத்தார்.
"குழந்தாய்... நான் கண்ட பெரும் செல்வத்தை உனக்குக் காட்டுகிறேன் வா... என் பின்னால்..." என்றார்.
முனிவர் முன்னால் நடக்க, அவரின் பின்னால் அவன் சீடனாக அவரைப் பின் தொடர்ந்தான்.