அரசன் ஒருவன் அருகிலிருந்த நாட்டைக் கைப்பற்ற எண்ணி பெரிய படையுடம் புறப்பட்டான்.
காலம் சரியில்லாத நிலையில் அரசன் படையெடுத்துச் செல்கிறாரே என்று அனைவரும் வருத்தப்பட்டனர். வெற்றி கிடைப்பதும் அரிதானது என்றாலும் அரசனிடம் இதை எப்படி சொல்வது என்று பலரும் யோசித்தார்கள். அமைச்சரும் வேறு வழியில்லாமல் அரசனின் படையுடன் சென்றார்.
காட்டில் ஓரிடத்தில் பாசறை அமைத்துத் தங்கினர்.
அப்போது ஓர் ஆந்தையை நிறைய காக்கைகள் துரத்தி வந்தன. அந்த ஆந்தை மூங்கில் புதருக்குள் சென்று ஒளிந்து கொண்டது.
எப்படியும் ஆந்தை வெளியில் வரும் என்று அந்தக் காக்கைகள் காத்திருந்தன.
பதுங்கியிருந்த ஆந்தை பொறுமை இழந்தது. எப்படியும் தப்பித்துச் சென்று விடுவோம் என்று புதரை விட்டு வெளியேறி பறந்தது.
இதற்காகவே காத்திருந்த காக்கைகள் அதைச் சூழ்ந்து கொண்டன. அவற்றிடம் சிக்கிக் கொண்ட ஆந்தையால் தப்பிக்க முடியவில்லை.
காக்கைகள் அனைத்தும் ஆந்தையை விரட்டி விரட்டிக் கொத்திக் காயப்படுத்திக் கொண்டிருந்தன.
இதைப் பார்த்த அரசன் அமைச்சரிடம், "ஆந்தையை காக்கைகள் ஏன் இப்படி விரட்டி விரட்டிக் கொத்திக் காயப்படுத்துகின்றன" என்று கேட்டான்.
இதைப் பார்த்த அமைச்சர், "அரசே! காலம் வலிமையானது. வலிமை மிகுந்தவர்களை வலிமையற்றவர்களாகவும், வலிமை இல்லாதவர்களை வலிமையுடையவர்களாகவும் மாற்றும். அந்த ஆந்தை மட்டும் காலத்தின் தன்மை அறிந்து இருட்டும்வரை பதுங்கி இருந்திருந்தால் இப்படி காக்கைகளிடம் கொத்துப்பட்டு இறந்திருக்க வேண்டியிருக்காது. எத்தனை காக்கைகள் இருந்தாலும் இருட்டில் அவற்றிற்குக் கண் தெரியாது. ஆந்தை எளிதாகத் தப்பிச் சென்றிருக்கும். காலத்தின் இயல்பை அறிந்து அதற்கேற்ப நடப்பவர்கள்தான் வெற்றி அடைவார்கள்." என்றார்.
அரசனுக்கு அப்போதுதான் அவனது தவறு தெரிந்தது. படையை அழைத்துக் கொண்டு நாடு திரும்பினான்.