ஒரு பணக்காரன் தன் வீட்டுக்குக் குருவை அழைத்து வந்தான்.
அந்த வீடு, பெரிய வீடு. இருவரும் மொட்டை மாடியில் நின்றிருந்தார்கள்.
அப்போது அந்தப் பணக்காரன், தனக்கு மன நிம்மதியே இல்லை என்று அந்தக் குருவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
“குருவே, வடக்குப் பக்கம் பாருங்கள். அதோ அங்கே தூரத்தில் ஒரு பனைமரம் தெரிகிறதே, அதுவரை என்னோட நிலம்தான். நான்தான் கவனிச்சுக்கறேன். இதோ தெற்குப் பக்கம் தெரிகிறதே ஒரு மாமரம், அதுவரையும் என் இடம்தான். மேற்குப் பக்கம் பாருங்கள், தூரத்தில் ஒரு குன்று தெரிகிறதே, அதுவரைக்கும் என் இடம்தான். அப்புறம் வீட்டுக்கு எதிரில் கிழக்குப் பக்கம் அது முழுதும் எனதுதான்” என்று தன் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களைக் காட்டினான்.
குரு அமைதியாக இருந்தார்.
“இந்தச் சொத்துக்கள் எல்லாம் நான் கஷ்டப்பட்டுச் சம்பாதித்தவை. இத்தனை வசதிகள் இருந்தும் எனக்கு நிம்மதி இல்லாமல் இருக்கு குருவே” என்றான்.
குரு அவனை அமைதியாகப் பார்த்தார்.
“எல்லா இடங்களிலேயும் சொத்து சேகரித்து வைத்திருக்கிறாய். இங்கே சேர்த்து வைத்திருக்கிறாயா?” என்று அவன் நெஞ்சைச் சுட்டிக் காட்டினார்.
பணக்காரனுக்கு ஒன்றும் புரியவில்லை, அவன் குருவைப் பார்த்தான்.
அந்தக் குரு, “அன்பு, பாசம், நட்பு போன்ற நல்ல சொத்துக்களை அங்கே சேர்க்க வேண்டும். அதுதான் வாழ்க்கைக்கு நிம்மதி தரும்” என்றார் குரு.