துறவி ஒருவரை ஒருவன் பார்க்கச் சென்றான்.
அவரிடம் தன நீண்ட நாள் சந்தேகத்தைக் கேட்க அனுமதி கேட்டான்.
அவரும் சம்மதிக்கவே அவன், “எப்போதும் நீங்கள் சிரித்த முகத்துடனஇருக்கிறீர்கள்... கோபம் கொள்வதே இல்லை. நீங்கள் பொறாமைப்பட்டு யாரும் பார்த்ததில்லை. என் சந்தேகம் என்னவென்றால், நீங்கள் நடிக்கிறீர்களா? உண்மையில் இப்படி இருக்க முடியுமா?” என்று கேட்டான்.
துறவி சொன்னார், “அது இருக்கட்டும்.இப்போது உன் கைரேகைகளைப் பார்த்தேன். இன்னும் ஏழு நாட்கள்தான் நீ உயிருடன் இருப்பாய். ஏழாவது நாள் சூரியன் மறையும்போது நீ மரணமடைவாய்” என்றார்.
அவன் பதட்டத்துடன் உடனே அங்கிருந்து கிளம்பி விட்டான்.
வீட்டிற்குச் சென்ற அவன் வீட்டை விட்டு வெளியே போகாமால், வீட்டுக்குள்ளேயேப் படுத்துக் கொண்டான்.
குடும்பத்தினர் அவனிடம், என்னவென்று விசாரிக்க நடந்ததைச் சொன்னான்.
எல்லோரும் அழ ஆரம்பித்தனர். சாவு நெருங்கிக் கொண்டிருந்தது. எதுவும் இனி செய்ய முடியாது என்ற தெளிவான முடிவுக்கு அவன் வந்ததும், அவனுக்குள் ஒரு விசித்திரம் நிகழ்ந்தது.
அவன் யோசித்தான், “துறவி தினமும் தியானம் செய்யச் சொல்வாரே. நாம்கூட, இப்போது என்ன அவசரம், வயதான காலத்தில் பார்த்துக் கொள்ளலாமே என்று நினைத்தோம். பல ஆண்டுகள் தள்ளிப் போட்டதை ஏன் இப்போது ஆரம்பிக்கக்கூடாது ?” இரண்டு தினங்களில் முழுமையான மௌனத்தில் ஆழ்ந்து விட்டான். நான்காவது நாள், அவன் முகம் அழகாகக் கருணை ததும்ப ஒரு ஞானி போலக் காட்சி அளித்தது.
ஏழாவது நாள் வந்தது. சூரியன் மறையும் நேரமும் வந்தது. குடும்பத்தினர் யாரையும் கவலைப்படக்கூடாது என்று கூறிவிட்டான்.
அந்தத் தருணத்தில் துறவி அங்கு வந்தார்.
அவனைக் காப்பாற்ற முடியுமா எனக் குடும்பத்தினர் துறவியிடம் கேட்டனர்.
துறவி அவனிடம், “நீ சாக மாட்டாய்... இன்னும் உனக்கு நீண்ட ஆயுள் உள்ளது. நீ கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்க எனக்குத் தெரிந்த வழி இதுதான். நான் உன்னிடம் என்ன சொல்லியிருந்தாலும் உன் சந்தேகம் தீர்ந்திருக்காது. எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும் என்ற அனுபவத்தை உனக்குக் கொடுக்க விரும்பினேன். இந்த ஏழு நாட்களும் உனக்கு அந்த அனுபவத்தைத் தந்து விட்டது. உனக்கு வேண்டிய பதில் கிடைத்து விட்டது அல்லவா?” என்றார்.
அவன் உடனே படுக்கையிலிருந்து கீழே குதித்துத் துறவியின் பாதத்தைத் தொட்டு வணங்கினார்.