ஒரு கிராமத்தில் மகான் ஒருவர் வசித்து வந்தார். பயங்கரமான தொற்று நோய் அங்கு பரவி கோழி, சேவல் என்று அனைத்தும் அழிந்து போய்விட்டது. மக்கள் அவரிடம் சென்று முறையிட்டனர். "எல்லாம் நன்மைக்கே" என்று சொல்லி அவர்களை வழியனுப்பி வைத்தார் அந்த மகான்.
சில நாட்கள் கழித்து , வேறொரு கொடிய தொற்றுநோய் காரணமாக அங்கிருந்த நாய்கள் அனைத்தும் இறந்து விட்டன. "காவலுக்கென்று ஒரு நாய் கூட மிச்சமில்லையே" என்று வருந்தி அவரிடம் சென்றனர். இம்முறையும் அந்த மகான் பொறுமையுடன், "நன்மை கருதியே கடவுள் இவ்வாறு செய்திருப்பார்." என்று பதில் அளித்தார்.
அந்தக் காலத்தில் அடுப்பின் கனல் அணைந்துவிடாமல் இருப்பதற்காக சாம்பலால் மூடி வைத்திருப்பார்கள். என்ன ஆச்சர்யம்! அந்த ஊரில் எல்லா அடுப்புகளும் அணைந்து விட்டன. கலவரத்துடன் ஓடிவந்த மக்கள் இது பற்றி அவரிடம் தெரிவித்தனர். அதற்கு அந்த மகான் "கடவுளின் கருணையே" என மொழிந்தார்.
பொறுமை எல்லை மீறிய நிலையில், "சமைக்கக் கூட இயலாத நிலையில் என்ன நன்மை விளைந்துவிடப் போகிறது?" என்ற அங்கலாய்ப்புடன் கலைந்தனர் மக்கள்.
அடுத்த நாள், ஒரே கொடுங்கோல் மன்னன் பெரும்படையுடன் அந்தக் கிராமத்தை நோக்கிப் படையெடுத்து வந்து கொண்டிருந்தான். எனினும் ஒரு நாயின் குரைப்புச் சத்தமோ, சேவலின் கூவலோ, ஏன் அடுப்பு எரிவதற்குச் சான்றாகப் புகைமண்டலமோ எதுவும் தென்படாதது கண்டு வியப்பில் ஆழ்ந்தான் கொடுங்கோலன்.
"மக்களே வசிக்காத கிராமம் போல இருக்கிறது. இங்கு நமக்கு கொள்ளையிட என்ன இருக்கப் போகிறது?" என்று எண்ணி தன் படையை வேறு ஊர் நோக்கித் திருப்பச் சொன்னான்.
மறுநாள் அந்த ஊர் மக்கள் பக்கத்து ஊர்களிலெல்லாம் கொள்ளையிடப்பட்டிருக்க தங்கள் ஊர் மட்டும் காப்பாற்றப்பட்ட்து குறித்து அறிந்து வியந்தனர்.
மகானின் தீர்க்க தரிசனம் கண்டு ஊர் மக்கள் வியந்தனர்.