ஒரு பணக்காரனிடம் சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் ஒருவன் வேலை பார்த்து வந்தான்.ஒரு நாள் பணக்காரன் அவனுடன் வெளியூர் சென்றான்.வழியில் இருட்டி விட்டது. எனவே அங்கிருந்த ஒரு சத்திரத்தில் தங்க முடிவு செய்து, குதிரையை வெளியில் ஒரு மரத்தில் கட்டிவிட்டு, வேலைக்காரனிடம், இரவு முழுவதும் தூங்காமல் குதிரையைப் பார்த்துக் கொள்ளச் சொன்னான்.
இரவு முழுவதும் எப்படித் தூங்காமல் இருப்பது என்று சந்தேகம் கேட்க, அந்தப் பணக்காரனும் ஏதேனும் தீர்க்க முடியாத பிரச்சினை பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால் தூக்கம் வராது’ என்றான்.
அவனும் சரி என்றான்.
சிறிது நேரம் கழித்து பணக்காரன், அவன் என்ன செய்கிறான் என்பதைப் பார்ப்பதற்காக வெளியே வந்தான்.
அவனும்,'முதலாளி, நான் தூங்கவில்லை. வானில் இருக்கும் நட்சத்திரங்கள் தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து போட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்' என்றான்.
நல்லது என்று கூறிச்சென்ற பணக்காரன் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தான்.
அவன், 'முதலாளி, கடலில் உப்பு தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து கொட்டினார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்' என்று சொன்னான்.
அதன் பிறகு அந்தப் பணக்காரன் நிம்மதியுடன் படுத்து தூங்கிப் போனான்.
காலையில் எழுந்து வந்து பார்த்த போது வேலையாள் தீவிரமாகச் சிந்தனை செய்து கொண்டிருப்பதைப் பார்த்த பணக்காரன் ,''இப்போது என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டான்.
அவன் சொன்னான், 'முதலாளி, உங்கள் குதிரை தானாக ஓடி விட்டதா அல்லது யாரேனும் திருடிச் சென்று விட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்’