திருமலாம்பாள் என்ற அம்மையார், கிருஷண தேவராயரின் துணைவியருள் ஒருவர். அவர் அடிக்கடி கொட்டாவி விட்டுக் கொண்டே இருப்பார். அது அவருக்குப் பழக்கமாகி விட்டது. ஆனால் அரசருக்கோ அது பிடிக்கவில்லை. எனவே அவரைச் சந்திப்பதையே நிறுத்தி விட்டார்.
இதனால் அந்த அம்மையார் மிகுந்த வேதனையடைந்தார்.
வருத்தத்துடன் இருந்த அந்த அம்மையாரைப் பார்த்த தெனாலிராமன் என்ன நடந்தது என்று விசாரித்தார்.
அந்த அம்மையாரோ, நான் கொட்டாவி விடுவது பிடிக்காமல் எனது இருப்பிடத்திற்கு மன்னர் வருவதையே நிறுத்திவிட்டார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று சொல்லி வருந்தினாள்.
தெனாலிராமன் இப்பிரச்சனையைத் தீர்ப்பதாக அந்த அம்மையாருக்கு வாக்கு கொடுத்தார்.
ஒரு நாள் அரசு அதிகாரிகள் சிலர் அரசரைக் காண வந்தனர். அப்போது தெனாலிராமனும் அரசருடனிருந்தான். அந்த அதிகாரிகள் நாட்டில் பயிர்வளத்தை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றி அரசருடன் விவாதித்துக் கொண்டிருந்தனர்.
தெனாலி ராமனோ அவர்களது பேச்சினுள் புகுந்து பயிர் நன்றாக வளர வேண்டுமானால் யாரும் கொட்டாவி விடக்கூடாது என்றான். தெனாலிராமனோ விடாமல் விவசாயம் செய்பவர்கள் யாரும் வாழ்நாள் முழுவதும் கொட்டாவி விடவே கூடாது. அப்போது தான் பயிர் நன்றாக வளரும் என்றான்.
மன்னருக்குக் கோபம் வந்துவிட்டது. ராமா, இது என்ன வினோதம், விவசாயத்திற்காக வாழ்நாள் முழுவதும் கொட்டாவி விடாமல் இருக்கமுடியுமா? என்றார்.
வேறென்ன மன்னா, உங்கள் முன்னால் கொட்டாவி விடும் போது உங்களுக்குக் கோபம் வருவதைப் போல, பயிர்கள் முன்னால் கொட்டாவி விட்டால் பயிர்கள் கோபித்துக் கொள்ளாதா? கொட்டாவியால் ஒருவர் வாழ்க்கை நாசம் ஆக வேண்டுமா? என்று கூறிவிட்டு மன்னரை ஓரக்கண்ணால் பார்த்தார் தெனாலிராமன்.
மன்னருக்குத் தெனாலிராமன் என்ன சொன்னார் என்று மறைமுகமாக இருந்தாலும் புரிந்து போனது.
அப்போதே இந்தக் கொட்டாவிக்காகத் தன் மனைவியை கோபித்துக் கொண்டேனே என்று வருந்தினார்.
தெனாலிராமன் புத்திசாலித்தனமாக தகுந்த நேரத்தில் அதை புரிய வைத்தான் என்பதையும் எண்ணி மகிழ்ந்தார்.
பின்னர் மகிழ்ச்சியில் திளைத்த அம்மையாரும் மன்னரும் சேர்ந்து, தெனாலிராமனுக்குப் பல பரிசுகள் அளித்து மகிழ்ந்தனர்.