புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையைப் பார்க்கப் போகிறார்.
புத்தரின் மனைவி, “ என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லிவிட்டுப் போயிருக்கலாமே... நான் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிகவும் வருத்தி விட்டது ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்?” என்று கேட்டாள்.
புத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டுத் தான் பயந்தது, அவளை அல்ல தன்னைத்தான் என்கிறார். மனைவி மகனின் முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கிவிடுவேன் எனப் பயந்ததாய்க் கூறுகிறார்.
அடுத்து அவர் மனைவி, “நீங்கள் இந்த அரண்மனையைவிட்டுப் போகாமல் இங்கேயேத் தங்கி இருந்தால் ஞானம் பெற்றிருக்க முடியாதா?” என்று கேட்டாள்.
புத்தர், “தாராளமாக , அதற்கு நான் மலை காடு ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லைதான். ஆனால் இங்கிருந்து ஓடிப் போகும் போது நான் அதை அறிந்திருக்கவில்லை. உண்மையில் எங்கிருந்தாலும் எனக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கும். அதற்கு இடம் முக்கியமில்லை” என்றார்.
புத்தனின் வாழ்க்கையைப் போற்றும் யாரும் அவர் மனைவி யசோதராவைப் பற்றிப் பேசுவதே இல்லை. புத்தர் போனது போல் யசோதரா ஒரு நள்ளிரவில் வெளியேறி இருந்தால் இந்த உலகம் ஒப்புக் கொண்டிருக்குமா? தவறாகச் சொல்லியிருக்கும். சரி புத்தர் போன பின்பும்தான் என்ன செய்தது அவளை வாழ்க்கையில்லாதவள் என்றது. அப்படி ஒன்றும் வயதாகிவிடாத அழகு மங்கை. ஒற்றைக் குழந்தை ராகுலன். அவள் வாழ்க்கையில் எவ்வளவு போராடியிருப்பாள்? புத்தர் போனதும் தன் தலையை மழித்துக்கொண்டாள். ஒற்றைப் பிள்ளையின் அப்பா எங்கே எனும் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமலேயே பதின்வயது வரை வளர்க்கப் போராடினாள்.
எல்லாவற்றையும் துறந்து எத்தொல்லையும் இல்லாமல் துறவியானான் புத்தன். எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு எல்லாத் துயரையும் அனுபவித்தபடி துறவியாய் வாழ்ந்தாள் யசோதரா.
யார் உண்மையான துறவி என்று சொல்லுங்கள் பார்ப்போம்!