கோரேலால் என்பவர் மிகப் பெரிய சிற்பி. அவர் யாரைச் சிலை வடித்தாலும் அவரைப் போல அந்தச் சிற்பம் வித்தியாசமில்லாமல் இருக்கும். சிறு வேறுபாடு கூட காண முடியாது. இதனால் அவரது புகழ் அனைத்து இடத்திலும் பரவியிருந்தது.
ஒருநாள் அவர் கனவில் சாவுக் கடவுள் தோன்றினார்.
அவர், "இன்றிலிருந்து பதினைந்தாவது நாள் உன் உயிரை எடுத்துச் செல்லப் போகிறேன்" என்றார்.
சிற்பி கோரேலால் வரப்போகும் சாவிலிருந்து தப்பிப்பது எப்படி? என்று யோசித்தார். அவருக்கு ஒரு வழி தோன்றியது.
தன்னைப் போலவே ஒன்பது சிற்பங்கள் செய்தார்.
பதினைந்தாம் நாள் வந்தது.
அவர் செய்த ஒன்பது சிற்பங்களுக்கிடையே தானும் ஒரு சிற்பம் போல் நின்று கொண்டார்.
எமதூதர்கள் அங்கு வந்தார்கள். பத்துக் கோரேலால் அங்கு இருந்தனர். எது உண்மையான கோரேலால் என்று ஒவ்வொரு சிற்பத்தினருகிலும் சென்று பார்த்தனர்.
கோரேலால் மூச்சை அடக்கி சிற்பம் போலவே நின்றிருந்தார். அவர்களால் கோரேலாலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவர்கள் திரும்பிச் சென்று எமனிடம் பத்து கோரேலால் இருப்பதையும் உண்மையான கோரேலாலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் சொன்னார்கள்.
எமனும் அங்கு வந்தார்.
அங்கிருந்த பத்து கொரேலால் சிற்பங்களில் எது உண்மையான கோரேலால் என்று அவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
எமன் உண்மையைக் கண்டுபிடிக்க ஒரு வழியைத் தேடினார். அவருக்கும் ஒரு வழி தெரிந்தது.
"கோரேலால் நீ செய்த சிற்பங்கள் அருமையாக இருக்கிறது. இருப்பினும் அதில் ஒரு குறை இருக்கிறது." என்றார்.
"என் சிற்பத்தில் குறையா? இருக்கவே முடியாது" என்றபடி ஒரு அடி முன்னோக்கி வந்தார். "எமனே என்னுடைய சிற்பத்தில் என்ன குறை கண்டாய்?" என்று கேட்டார்.
அவரைக் காண்பித்த எமன், "மற்ற சிற்பத்திற்கெல்லாம் இல்லாத தற்பெருமை இந்த சிற்பத்தில் மட்டும் இருக்கிறது. அதனால் இது உயிரை விடப் போகிறது" என்றார்.
கொரேலால் திறமை அவரைக் காப்பாற்ற முயன்றாலும் அவருடைய தற்பெருமை அவருக்கு சாவைத் தேடித் தந்தது.