துறவி ஒருவரை சந்தித்த சிலர் வாழ்வில் ஏராளமான சிக்கல்கள் வருவதாகச் சொன்னார்கள்.
எதுவும் பேசாத துறவி எல்லோரிடமும் சிக்கலான நூல்கண்டுகளைக் கொடுத்து அதனைப் பிரித்துத் தரச் சொன்னார்.
அவர்கள் சிக்கலைப் பிரிக்கத் தொடங்கியதும், அருகே சிலரை ஆடவும் பாடவும் வைத்தார்.
நூலில் சிக்கலை எடுப்பதற்கு பதிலாக மேலும் சிக்கலாக்கி விடுவிக்க முடியாமல் தவித்தார்கள் எல்லோரும்.
”சிக்கலை எடுக்க முடியாமல் இப்போது நீங்கள் தவிக்கக் காரணம் என்ன?” என்று கேட்டார் துறவி.
அவர்களனைவரும், “ஏற்கெனவே இருந்த சிக்கலை கவனக் குறைவினால் நாங்கள் மேலும் சிக்கலாக்கிவிட்டதுதான் காரணம்” என்று சொன்னார்கள்.
”இப்படித்தான் பிறரால் ஏற்படும் சிறு பிரச்சனைகளைக் கவனக்குறைவாக செயல்பட்டு நீங்களே பெரிதாக ஆக்கிக் கொள்கிறீர்கள். கவனமாக இருந்தாலே போதும் எல்லா சிக்கல்களையும் அவிழ்த்து விடலாம்” என்றார் துறவி.