சூடாகர்ணன் என்றொரு சன்னியாசி ஒருவன் இருந்தான்.
தினமும் பிச்சை எடுத்து வருவான். உண்டது போக மீதமிருப்பதை ஒரு கொப்பரையில் உறி மீது வைத்து விடுவான். பசிக்கும் போது சாப்பிடலாம் அல்லவா?
ஆனால்;
அவன் உறங்கும் நேரம் பார்த்து அந்த உறிக்குத் தாவிச்சென்று ஒரு எலி அந்தச் சோற்றைத் தின்று விடும். அதற்காகவே அவன் விழித்திருக்கும் போது கூட ஒரு கம்பைக் கையில் வைத்துக் கொண்டு தரையில் தட்டி எலிக்கு அச்சம் தரும்படி சத்தம் எழுப்பிக் கொண்டிருப்பான். அவனுக்கு வேறு வழி எதுவும் தோன்றவில்லை.
ஒரு நாள் அவன் வீட்டிற்கு வீணாகர்ணன் எனும் மற்றொரு சன்னியாசி வந்தான்.
வீணாகர்ணனுக்கும் பிச்சை எடுப்பதுதான் தொழில்.
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது சூடாகர்ணன் சும்மா இருக்கவில்லை.
தடியால் தரையைத் தட்டிக் கொண்டே இருந்தான்.
"நான் பேசிக் கொண்டிருக்கும் போது கவனிக்காமல் நீ தரையைத் தட்டிக் கொண்டிருக்கிறாயே?" என்று சற்று கோபமாகக் கேட்டான் வீணாகர்ணன்.
"நண்பா, உன் வார்த்தையை நான் மதிக்காமல் இப்படி செய்யவில்லை. என்னுடைய வீட்டில் எலி ஒன்று இருக்கிறது. அது நான் சற்று அசந்தால் கூட அந்த உறியிலிருக்கும் சோற்றைக் காலி செய்து விடும். அதனால்தான் அவ்வப்போது இந்தத் தடியால் தட்டிக் கொண்டிருக்கிறேன்." என்றான் சூடாகர்ணன்.
"எலி உறியில் போய் சோறு திருடுகிறதா?"
"ஆமாம். அதனால்தான் இந்த வேலை"
உறியைப் பார்த்த வீணாகர்ணன் "கொஞ்சம் பலமுள்ள எலியால்தான் இவ்வளவு உயரம் தாவமுடியும். அதற்கு ஏதோ ஒரு காரணம் ஆதாரம் இருக்க வேண்டும். உண்டு கொழுத்திருக்க திரவியம் எங்கோ அதற்கு இருக்க வேண்டும். எலியின் வலையைப் பார்ப்போம்."
அதுநாள் வரைக்கும் எலிக்கு ஒரு வலை இருக்கும் என்றே நினைத்திராத சூடாகர்ணன் இத்தனை நாள் எலி நடமாட்டத்தை வைத்து வலையைக் கண்டுபிடித்தான். "ஆ...நண்பன் சொன்னது சரியாகப் போயிற்று"
வீணாகரணன் அந்த வலையைத் தோண்டினான். வலை குழியில் அதிக அளவில் தானியங்கள் இருந்தன.
"பார்த்தாயா, இதைத் தின்றுவிட்டுத்தான் கொழுப்பேறிய அந்த எலி அவ்வளவு உயரமுள்ள உறிக்குத் தாவுகிறது" என்று அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டான்.
வலையை இழந்த எலி அதிலிருந்த தானியங்களையும் இழந்ததால் வலிமை இழந்தது.
சேமிப்பிலிருந்து சுகமாகத் தின்று மிதப்பில் துள்ளி வந்த எலி மிகவும் பலவீனமுற்றது.
ஒருநாள் அது நகரவும் முடியாமல் செல்லும் போது சூடாகர்ணன் தடியால் ஒரு அடியும் கொடுத்தான்.
அடிபட்ட எலிக்கு கிலி பிடித்துக் கொண்டது. "இனி இங்கிருந்தால் பலிதான்" என்று எண்ணியபடி அவ்வீட்டிலிருந்தே வேறு இடத்துக்குச் சென்றுவிட்டது.
ஆதாரம் அறிந்து அதைச் சேதாரம் செய்ததால் சூடாகர்ணனுக்கு எலித்தொல்லை நீங்கியதுடன் உறியில் வைத்திருந்த உணவும் அவனுக்கு உறுதியாகி விட்டது.