ஒரு குருவானவர் வெளிநாட்டுப் பயணம் செய்வதற்காக, மிகப் பிரபலமான விமானம் ஒன்றில் பயணம் செய்தார்.
விமானம் நடுவானில் பயணித்த போது பணிப் பெண், எல்லாருக்கும் வரவேற்பு பானமாக விலை உயர்ந்த மதுபானத்தைக் கொடுத்து உபசரித்தபடி வந்து கொண்டிருந்தார்.
இப்போது குருவானவரின் முறை வந்தது.
அவரிடமும் பணிப் பெண் ஒரு மதுக்கோப்பையை நீட்டினார்.
அவர் வாங்க மறுத்துவிட்டார்.
பணிப்பெண், "ஐயா , எங்கள் விமானத்தில் பயணிக்கிற ஒவ்வொருவருக்கும் நாங்கள் கொடுக்கும் உயர்தர மரியாதை இது. ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றார்.
குருவானவர், "அம்மா, உங்கள் அன்புக்கு நன்றி. இது எனக்கு வேண்டாம்" என்றார்.
பணிப்பெண் விடவில்லை. "உலகிலேயே விலை உயர்ந்த மதுவகை இது. கொஞ்சம் குடித்தால் அப்புறம் விடவே மாட்டீர்கள்" என்றார்.
அப்போதும் குருவானவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
பணிப் பெண் கடைசியாகச் சொன்னார், "இவ்வளவு தூரம் நான் சொன்னதற்காக ஒரு துளியேனும் பருகுங்களேன்"
குருவானவர் சொன்னார், "அம்மா, நான் ஒரு குருவானவர், மதுவெல்லாம் பருக மாட்டேன். நீங்கள் ஒன்று செய்யுங்கள். இதை விமான ஓட்டியிடம் கொடுத்து விடுங்கள்"
அவர் அப்படிச் சொன்னதும் பணிப் பெண் ஆடிப்போனார்.
"ஐயோ, பணியில் இருக்கிற விமானி எப்படி மது அருந்த முடியும்...? இதை, அவர் குடித்தால், அவர் புத்தி தடுமாறி விமானம் விபத்துக்குள்ளாகுமே. இத்தனை உயிர்களும் பறிபோகுமே" என்று பதறினார்.
குருவானவர் சொன்னார், ''சகோதரி, குருவானவர் வாழ்க்கையும் இப்படிப்பட்டதுதான். தகாத காரியங்களை செய்தால் புத்தி தடுமாறி விபத்து நேரிடும். நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிற பல ஆத்மாக்களுக்கு அது இடறல் உண்டாக்கும். எனவே, புத்தி தடுமாறாது இருக்கும்படி நானும் எப்போதும் விழிப்புடன் இருக்க, இது போன்ற பாவச் செயல்களைத் தவிர்த்து விடுகிறேன்" என்றார்.
பணிப் பெண் பேசாமல் நகர்ந்து போனார்.
நம்முடைய தூய வாழ்வைக் குலைக்கிற எந்தக் காரியத்தில் இருந்தும் விலகி இருக்க வேண்டும்.