ஒரு சீடன் தன் குருவிடம், "தவசீலரே.. வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்?" என்று கேட்டான்.
அவர், "மகனே.. நீ வாழ்வில் என்னவாக இருக்க விரும்புகிறாய்? எருமையாகவா, கழுதையாகவா இல்லை குதிரையாகவா?" என்று கேட்டார்.
"புரியவில்லை குருவே..."
"எருமையின் பின்னால் தட்டினால் என்ன செய்யும்?"
"எதையும் கண்டு கொள்ளாது தன் வேலையைப் பார்க்கும்..."
"கழுதையைப் பின்னால் தட்டினால்?"
"தட்டியவரை எட்டி உதைக்கும்..."
"ஆனால் குதிரை...?"
"முன்னால் பாய்ந்து செல்லும்..."
"புரிந்ததா... நம் மீது பிறர் கூறும் அவதூறுகளைக் கூட நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்... இதுதான் வாழ்வின் ரகசியம்..."
சிஷ்யன் மகிழ்ச்சியாகத் திரும்பிச் சென்றான்.