கடுங்குளிரில் வந்த வயது முதிர்ந்த ஒருவருக்குப் புத்த விஹாரத்தில் தங்க இடம் கொடுக்கப்பட்டது.
அன்று இரவு கடுங்குளிர். கிழவரால் குளிரைத் தாங்க முடியவில்லை. மரத்தால் செய்யப்பட ஒரு புத்தர் சிலையை எடுத்து அதை எரித்துக் குளிர் காயத் தொடங்கினார்.
மரம் எரியும் சப்தம் கேட்ட விஹாரத்தின் குரு ஓடிவந்து புத்தர் சிலை எரிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
கிழவரிடம்,”நீங்கள் என்ன செய்கிறீர்கள்?உங்களுக்குப் பைத்தியமா?தெய்வத்தையே எரித்து விட்டீர்களே”என்று கோபத்தில் கதறினார்.
உடனே கிழவர் ஒரு குச்சியைக் கொண்டு சாம்பலைக் கிளறினார்.
அவர் என்ன செய்கிறார் என்று குரு கேட்டபோது, அக்கிழவர் சொன்னார்,”நான் எலும்புகளைத் தேடுகிறேன். நான் எரித்தது புத்தரை என்றால் எலும்புகள் இருக்க வேண்டுமே?”
கோபத்துடன் குரு அவரை மடத்தை விட்டு வெளியேத் தள்ளி விட்டார்.
மறுநாள் காலை அக்கிழவர் என்ன ஆனார் என்று வெளியே சென்று பார்த்தார்.
அக்கிழவர் அங்குள்ள ஒரு மைல் கல்லின் முன் அமர்ந்து பூக்களைத் தூவி,”புத்தம் சரணம் கச்சாமி,”என்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.
குரு அவர் அருகே சென்று,”என்ன செய்கிறீர்கள்?மைல் கல்தான் புத்தரா?”என்று கேட்டார்.
கிழவர் சொன்னார், “மரம் புத்தராகும்போது மைல் கல் புத்தராகக் கூடாதா?நேற்று நான் புத்தர் சிலையை எரித்துக் குளிர் காய்ந்தது, என்னுள் இருக்கும் புத்தரைக் காப்பாற்றத்தான். அந்த மரச்சிலைகள் உயிரற்றவை. அந்த மரப்புத்தரை எரித்ததற்காக நீங்கள் உயிருள்ள புத்தரை வெளியேத் துரத்தி விட்டீர்களே?”
அப்போதுதான் குருவுக்குத் தான் செய்தது தவறு என்று தெரிந்தது.