ஒரு காட்டில் சுபத்ரை என்கிற வேடர் குலப் பெண், தன் கணவருடன் வாழ்ந்து வந்தாள். வெகு நாட்களாக இவர்களுக்குக் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தது. பல விரதங்கள் மேற்கொண்ட பிறகு அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது.
அந்தக் குழந்தையை இருவரும் சீராட்டி வளர்த்து வந்தனர். அந்த ஐந்து வயதுச் சிறுவனை உணவூட்டி உறங்க வைத்துவிட்டு, நீர் எடுத்து வர கிணற்றுக்குச் சென்றாள் அப்பெண். பின்னர் தன் குடிசைக்குத் திரும்பியவள் திடுக்கிட்டாள்.
அவளுடைய மகனை ஒரு நாகம் தீண்ட, விஷம் ஏறி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். அதனைக் கண்ட அவள் தரையில் விழுந்து அழுது புலம்பினாள்.
கூக்குரல் கேட்டு ஓடி வந்த கணவன், விஷயமறிந்து, அப்பாம்பு தங்கியிருந்த புற்றைத் தகர்த்து அந்தப் பாம்பைப் பற்றி சுபத்ரையிடம் இழுத்து வந்தான்.
சுபத்ரை, நம் குழந்தையைத் தீண்டிய இப்பாம்பைக் கத்தியால் வெட்டிக் கொல்லட்டுமா? என்றான் வேடன்.
இந்தப் பாம்பைக் கொன்றுவிட்டால் என் குழந்தை உயிர்த்தெழுமா? எனக் கேட்டாள் சுபத்ரை.
இப்பாம்பைக் கொல்லாவிட்டால் மாத்திரம் நம் குழந்தை உயிர்த்தெழுமா? என்றான் கணவன்.
இந்தப் பாம்பைக் கொன்றுவிட்டால், உலகத்தில் பாம்பு வர்க்கமே இல்லாமல் போகுமா? பாம்பு வர்க்கம் இல்லாமல் போகாது. ஆனால், துஷ்ட பிராணிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் அல்லவா? என்று அவர்களுக்குள் உரையாடல் ஓடிக் கொண்டிருந்தது.
இவ்வுரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த பாம்பு, “மூடா! அவள் என்னைக் கொல்ல வேண்டாம் என்கிறாள். நீ கொல்வேன் என்று அடம்பிடிக்கிறாய். நன்றாக யோசித்துப் பார். இங்கு நீ, உன் மனைவி, உங்கள் குழந்தை இருக்கிறீர்கள். நான் தீண்டிக் கொல்ல வேண்டும் என்றால் உன்னையோ, உன் மனைவியையோக் கொன்றிருக்கலாம். உங்கள் குழந்தையை மட்டும் தானே தீண்டினேன். அதுவும் என்னை ம்ருத்யு தேவதை ஏவியதால் தான் குழந்தையை கடிக்க வேண்டியதாயிற்று. இதில் என் தவறு எதுவுமில்லை” என்றது.
“யார் அந்த ம்ருத்யு?” என்றான் வேடன்.
ம்ருத்யு தேவதை அவன் முன் தோன்றினான்.
அவளைப் பார்த்து, “என் குழந்தை இறப்புக்கு நீயா காரணம்?” என்றான் வேடுவன்.
“நான் காரணமில்லை. என்னைக் காலன் ஏவினான். நான் இந்தப் பாம்பை ஏவிக் குழந்தையைக் கடிக்கச் செய்தேன்” என்றது ம்ருத்யு தேவதை.
“காலன் என்பவன் யார்?” என வேடுவன் கேட்க, யமதர்மன் அவன் முன் தோன்றினான்.
“இந்தக் குழந்தை இறக்க நீதான் காரணமா?” என்று கேட்டான் வேடுவன்
உடனே அவன், “நான் காரணமில்லை, என்னை இறைவன் ஏவினான். நான் ம்ருத்யு தேவதையை ஏவினேன். ம்ருத்யு தேவதை பாம்பை ஏவியது, பாம்பு குழந்தையைக் கடித்தது” என்றான்.
“உன்னை ஏவிய இறைவன் யார்?” என்று கோபமாகக் கேட்டான் அந்த வேடுவன்.
அவன் முன் இறைவன் தோன்றினான்.
வேடுவன் இறைவனிடம், “எல்லாற்றுக்கும் காரணம் நீதானா?” என்றான் கோபத்துடன்.
இறைவன் அவனைப் பார்த்து, “இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும் என்பதே விதி. பாம்பு கடித்து உன் குழந்தை சாக வேண்டும் என்பதே நியதி. அது நிர்ணயமானதால் இப்படி நடந்தது” என்றான்.
வேடுவன், “எல்லோரும் தப்புவதற்கு ஒவ்வொரு காரணம் சொல்கிறீர்கள். நான் நம்ப மாட்டேன்” என்றபடி, “என் குழந்தையைக் கடித்த இந்தப் பாம்பை வெட்டியே தீருவேன்” என்று ஆவேசத்துடன் கத்தியை எடுக்கத் தன் தோள் பைக்குள் கையை விட்டான் வேடுவன்.
வேடுவனுக்கே தெரியாமல், அவன் தோளில் மாட்டியிருந்த பைக்குள் இருந்த வேறொரு பாம்பு அவனைத் தீண்டிவிட்டது. உடனே அவன் வாயில் நுரை தள்ளிக் கீழே மயங்கி விழுந்தான்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவன் மனைவி, உடனடியாகக் காட்டுக்குள் சென்று மூலிகையைப் பறித்து வந்து கசக்கிப் பிழிந்து, அவன் வாயில் அந்தச் சாற்றை ஊற்றினாள்.
வேடுவன் சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்தான், பிழைத்துக் கொண்டான்.
இந்நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் சிரித்தனர்.
இறைவன் சொன்னார்;
“எந்தப் பாம்பு கடிக்கு எந்த மூலிகை கொடுத்தால் விஷம் இறங்கும் என்ற ஞானம் படைத்தவள் உன் மனைவி. அப்படியிருந்தும் தன் குழந்தை பாம்பு கடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது அவளுக்கு அந்த ஞானம் வரவில்லை, குழந்தையைக் காப்பாற்றவில்லை. ஆனால், அவள் உன்னைக் காப்பாற்றி விட்டாள். இதற்கு என்ன காரணம்? பாம்பு கடித்துப் பிழைக்க வேண்டும் என்பது உன் விதி. பாம்பு கடித்து இறக்க வேண்டும் என்பது உன் குழந்தையின் விதி. அவரவர் வினைப்பயன்படி நடப்பது நடந்தே தீரும்”