ஒரு கிராமத்தில் கருப்பசாமி என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது.
வாரம் ஒரு முறை முருங்கைக்காய்களைப் பறித்து, பையில் நிரப்பித் தோளில் வைத்துக் கொண்டு ஒன்பது கல் தூரத்துக்கு அப்பால் இருக்கும் ஒரு நகரம் வரை நடந்து சென்று ஒரு மளிகைக் கடையில் விற்றுவிட்டு வருவது ராமசாமியின் வழக்கம்.
முருங்கைக்காயைக் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவார்.
பல வருடங்களாகக் கருப்பசாமி முருங்கைக்காய் கொண்டு வருவதால் மளிகைக் கடைக்காரர் அதை எடை போட்டுப் பார்த்ததில்லை; கருப்பசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகைப் பொருட்களைக் கொடுத்து அனுப்புவார்.
காரணம் கருப்பசாமியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது.
ஒரு நாள் கருப்பசாமி பத்து கிலோ முருங்கைக்காயைக் கொடுத்துவிட்டு அதற்கானப் பொருட்களை வாங்கிச் சென்றார்.
சிறிது நேரத்தில் பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க, அவருக்காக மளிகைக்காரர் எடைபோட அதில் ஒன்பது கிலோ மட்டுமே இருந்தது.
அன்று முழுவதும் மளிகைக்காரருக்குத் தூக்கமே வரவில்லை. கருப்பசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகத்தைச் செய்து விட்டாரே!
இத்தனை வருடங்களாக, இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே...!! என்று நினைத்து வருந்தினார்.
அடுத்த முறை கருப்பசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார்.
நான்கு நாட்கள் கழித்து, கருப்பசாமி, நிறைய முருங்கைக்காய்களைக் கொண்டு வந்திருந்தார்.
"கையும் களவுமாகப் பிடிக்க வேண்டுமென்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்கப் பத்து கிலோ என்றார் கருப்பசாமி.
அவர் முன்னாலேயே எடைபோட்டுப் பார்க்க ஒன்பது கிலோதான் இருந்தது.
வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார், பளார் என கருப்பசாமியின் கன்னத்தில் அறைந்தார்.
'இத்தனை வருஷமா இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கியா...? கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பித்தானே எடை போடாம அப்படியே வாங்கினேன்,
இப்படித் துரோகம் பண்ணிட்டியே...' என்று எரிந்து விழ, நிலைகுலைந்து போனார் கருப்பசாமி.
"அய்யா... என்ணை மன்னிச்சிடுங்க... நான் ரொம்ப ஏழை, எனக்கு எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு பணம் இல்லீங்க... ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டுக் கொண்டுவருவேன். இதைத் தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா!" என்று காலைப் பிடித்து அழ, மளிகைக்காரருக்குச் செருப்பால் அடித்தது போல் இருந்தது.
தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார்.
இத்தனை வருடங்களாக கருப்பசாமியை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும், அவருக்கேத் தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது.
நாம் எதைச் செய்கிறோமோ, அதுதான் நமக்கும் திரும்ப வரும். நல்லதைச் செய்தால் நல்லது வரும், தீமையைச் செய்தால் தீமை வரும்.