ஒரு அடர்ந்த காடு. மற்றக் காட்டைப் போல இந்த காட்டிலும் சிங்கம் தான் ராஜாவாக இருந்தது.
அதன் கீழ் மூன்று தந்திர நரிகள், ஒவ்வொரு நரிக்கும் கீழ் நான்கு வேட்டை நாய்கள் இருந்தன.
சிங்கத்தின் ஆணைக்கிணங்க ஒரு நரியின் தலைமையில் நான்கு வேட்டை நாய்கள் வேட்டைக்கு சென்று வேடையாடி வர வேண்டும்.
இந்தப் பதினைந்து மிருகம் (3 நரி + 12 வேட்டை நாய்) கொண்டு வரும் உணவை மற்ற விலங்குகள் உணவாக உண்டு வந்தது.
அதற்காக மற்ற விலங்குகள் வேலை செய்யாமல் இல்லை.
தங்கள் தகுதிக்கு தகுந்த உணவை வேட்டையாடுவதும், மீதி உணவை பராமரித்து அடுத்த வேளைக்கு உணவாக பயன்படுத்தும் வேலையை செய்து வந்தது. ஆனால், உணவுக்கு இந்த பதினைந்து பேர் பங்களிப்பு மிக அதிகமாக இருந்தது.
மூன்று நரிகளில் யார் சிறந்த நரி என்று தேர்வு செய்து, அதில் ஒன்றைத் தலைமை மேலாளராக நிர்வாகம் செய்யச் சிங்கம் தீர்மானித்தது. அதனால், ஒவ்வொரு குழுவிற்க்கு உணவு இவ்வளவு கொண்டு வர வேண்டும் என்று நிர்ணயம் செய்தது.
மூன்று நரி குழுவும் தங்கள் திறமையைப் பயன்படுத்தி வேட்டை நாய் உதவியோடு பல விலங்களுகளை வேட்டையாடி உணவாகக் கொண்டு வந்தது. சிங்கத்தை மகிழ்ச்சிப்படுத்த நரிகளும், வேட்டை நாய்களை முடிந்த வரை வேலை வாங்கியது.
எந்த நரி சிறந்தது? என்று சிங்கத்தால் தீர்மானிக்க முடியவில்லை. மூன்று நரிகளும் திறமையால் ஒன்றுக்கு ஒன்று விஞ்சியே இருந்தது.
பிறகு ஒரு யோசனை தோன்றியது. நரிக்குக் கீழ் வேலை செய்யும் வேட்டை நாயைத் தனியாக அழைத்துப் பேசியது.
அதில், முதல் நரியின் கீழ் வேலை செய்யும் வேட்டை நாய்கள், நரி தங்களில் ஒருவரகாக பழகுகிறது. அதனால், அவரின் தோழமைக்காக அவர் சொல்லும் வேலையைச் செய்கிறோம் என்றன.
இரண்டாவது நரியின் கீழ் வேலை செய்யும் வேட்டை நாய்கள், தங்கள் வேட்டையாடிய விலங்குகளில் இருந்து ஒரு பகுதியை வெகுமதியாக கொடுக்கும். அதனால், வேட்டையாட உத்வேகமாக இருந்தது என்றது.
மூன்றாவது நரியின் கீழ் வேலை செய்யும் வேட்டை நாய்கள், தங்களை விட நரி தான் அதிக மிருங்களை வேட்டையாடும். தலைமையில் இருப்பவர் இவ்வளவு வேட்டையாடும் போது, அவருக்குக் கீழ் இருக்கும் நாம் எவ்வளவு விலங்களுகளை வேட்டையாடிக் காட்ட வேண்டும் என்று கூறியது.
அதன் பிறகு, அந்தச் சிங்கம் மூன்றாவது நரியை தலைமை நரியாக அறிவித்தது என்று உங்களுக்குச் சொல்ல வேண்டுமா, என்ன?