ஒரு நாள் மாலை வேளையில் வயதான பெண்மணி ஒருவர் கார் அருகில் வெகு நேரமாக நிற்பதை ஒருவர் கவனித்தார்.
வாகனங்கள் செல்லும்போது அந்தப் பெண்மணி கை காட்டி நிறுத்தப் பார்த்தார், ஆனால் எந்த வாகனமும் நிற்கவில்லை.
அந்த நபர் அருகில் சென்று, “என்ன பிரச்சனை?” என்று அந்தப் பெண்மணியிடம் கேட்டார். “கார் டயர் பஞ்சர் ஆகி விட்டது” என்று அந்தப் பெண்மணி கூறினார்.
என் பெயர் தயாளன், நீங்கள் காரில் உட்காருங்கள் நான் டயர் மாற்றிக் கொடுக்கிறேன் என்று டயரைக் கழட்ட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு டயரை மாத்தினார் .
அந்த பெண்மணி, “உங்களுக்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும்?” என்று கேட்டார்.
“நான் சிறியதாக ஒரு டீக்கடை நடத்தி வருகிறேன், அதில் இருந்து வரும் பணமே எனக்குப் போதும். நீங்கள் பணம் எதுவும் தரவேண்டாம்” என்றார் அவர்.
“நீங்கள் கஷ்டப்படும் நேரத்தில் என்னாலான உதவி செய்தேன் அவ்வளவே. நீங்கள் பண உதவி செய்ய வேண்டும் என்றால் வேறு யாராவது ஒரு நபர் கஷ்டத்தில் இருக்கும்போது என்னை நினைத்துப் பாருங்கள், அவர்களுக்கு உதவி செய்யுங்கள்” என்றார்.
“உதவி செய்வது என்பது ஒரு சக்கரம் மாதிரி சுழன்று கொண்டே இருக்க வேண்டும். நான் உங்களுக்கு உதவி செய்தேன், நீங்கள் வேறு யாருக்காவது கஷ்டத்தில் இருக்கும்போது உதவி செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டு அவர் நடக்க ஆரம்பித்தார்.
அந்தப் பெண்மணி தயாளனை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு, காரை எடுத்து கொண்டு சென்றார். வழியில் தலைவலி எடுப்பது போல் இருக்கவே அருகில் உள்ள டீக்கடை அருகே காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.
டீக்கடை பார்ப்பதற்க்கு ரொம்பவே பரிதாபமாக இருந்தது, உள்ளே இருந்து ஒரு பெண் வந்து, “என்ன வேண்டும் அம்மா?” என்று கேட்டார். வயதான பெண்மணி டீக்கடையில் வேலை செய்யும் பெண்ணைப் பார்த்தார், அந்தப் பெண் ஒன்பது மாத கர்ப்பிணி என்பதை அவரிடம் பேசித் தெரிந்து கொண்டார்.
“குடிக்க டீ கொண்டு வாம்மா” என்றார். தயாளன் சொன்னது அவருக்கு நினைவு வந்தது. அந்த அம்மா டீ குடித்துவிட்டு ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை டேபிள் மேல் வைத்து விட்டுச் சென்று விட்டார்.
டீக்கடையில் இருந்த பெண் காபி டம்ளரைக் கழுவி வைத்து விட்டு வந்தார். டேபிளில் கட்டாகப் பணம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதை எடுத்து கொண்டு அந்த வயதான பெண்மணியிடம் கொடுக்க ஓடினார், அதற்குள் கார் கிளம்பிச் சென்று விட்டது.
கடையில் இருக்கும் வேலை எல்லாம் முடித்து விட்டு, கையில் அந்த வயதான பெண்மணி விட்டுச் சென்ற பணத்தையும் எடுத்து கொண்டு வீட்டுக்குச் சென்றார்.
பிரசவச் செலவுக்கு என்ன செய்ய போகிறோம் என்று புலம்பி கொண்டு இருந்த தன் கணவருக்கு இந்தப் பணத்தைக் காட்ட வேண்டும் என்று அருகில் சென்றார்.
ஆனால் மிகுந்த அசதியால் தூங்கி கொண்டு இருந்தார் தயாளன்.
என்ன நடக்கும்...? என்ன கிடைக்கும்....? என்று எதிர்பாராமால், நாம் எதைச் செய்கிறோமோ, அதுவே நமக்கும் நடக்கும். நமக்கும் கிடைக்கும்.