ஒரு பணக்காரனுக்கு பிறப்பற்ற நிலையை அடைய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அவன் கஞ்சப்பிரபு. அந்த ஊரில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சிக்குப் போனான். அங்கே பேசியவர் ‘தான தர்மம் செய்வது முக்தியைக் கொடுக்கும்’ என்றார்.
இவன் தான் கஞ்சனாயிற்றே எனவே தினமும் ஒரு பிடி அரிசி மட்டும் யாராவது துறவிக்கு கொடுத்து வந்தான். பொருள் மீது ஆசை உள்ளவர்கள் முக்தி அடைய முடியாது என்பது அவனுக்குத் தெரியாது. பல நாட்களாகப் பிடி அரிசி தானம் செய்தும் கூட முக்தி அவனை எட்டிப் பார்க்க மறுத்தது.
அவ்வூருக்கு வந்த துறவியிடம் போனான்.
“சுவாமி நான் தினமும் பிடியரிசி தர்மம் செய்கிறேன். நீங்களும் இதோ பிடியுங்கள் “ என்றவனை துறவி ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை. தன் நகத்தால் அருகிலிருந்த மரம் ஒன்றைக் கீறிகொண்டிருந்தார்.
அதைப் பார்த்த பணக்காரன், “ஏன் இப்படி கீறுகிறீர்கள், நான் தருவதை வாங்காமல் இப்படி கீறிக்கொண்டிருந்தால் எப்படி எனக்கு முக்தி கிடைக்கும்” என்றான்.
அதற்கு துறவி, “கீறிக் கீறியே இந்த மரத்தை கீழே விழ வைக்கப்போகிறேன்” என்றதும் பணக்காரன் சிரித்தான்.
“சரிதான் உமக்குப் பைத்தியம் முற்றிவிட்டது. இது தெரியாமல் உம்மிடம் போய் முக்தி பற்றிப் பேச வந்தேனே ஒரு கனமான மரத்தை நகத்தால் கீறி எப்போது கீழே சாய்க்க முடியும்?” என்றான்.
“ அடேய் தினமும் ஒரு பிடி அரிசியில் நீ பிறப்பற்ற நிலைய அடைய முயற்சிக்கும் போது, நகத்தால் கீறி இந்த மரத்தைச் சாய வைக்க முடியாதா/” என்று ஒரு போடு போட்டார் துறவி.
பணக்காரனுக்கு சுள்ளென்று உரைத்தது.
மிகுந்த பணிவுடன் “ சுவாமி இப்போதாவது சொல்லுங்கள் நான் எப்படி முக்தியடைவது?” என்றான்.
“அன்பனே நீ ஒரு குடும்பஸ்தன் உன்னால் முழுமையாக பற்றுதலை விட முடியாது. எனவே இந்த உலகத்தில் இருக்கும் எல்லாப் பொருட்கள், உறவுகள் மீது பட்டும் படாமல் உறவு வைத்திரு... வயதாக வயதாக அதையும் குறைத்துக் கொண்டே போ... ஜென்மங்கள் கழிய கழிய முக்தி நிலையை அடைவாய்” என்று அறிவுரை வழங்கினார்.
ஆசையைக் குறைப்பது ஒன்றே பிறப்பற்ற நிலைக்குரிய ஒரே பாதை என்பதை உணர்ந்து கொண்ட பணக்காரன் திரும்பிச் சென்றான்.