சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன.
ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது.
கழுதைப்புலி தன் குட்டியைச் சிங்கத்திடம் அனுப்பித் தன் பங்கைக் கேட்டது.
கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம்.
கழுதைப் புலியோ, "நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?" என்று கேட்டது.
குட்டி கழுதைப்புலி, "நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும்" என்றது.
அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி, அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது.
சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.
கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்துக் கொண்டு, "ஏன் இங்கே வந்தாய்?" என்று கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது.
பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி, தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, "சிங்க ராஜாவே, நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி. ஆனால், அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்" என்று குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டுத் திரும்பியது.
கழுதைப்புலியிடம் அதன் குட்டி, "பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வந்திருக்கிறீர்களே?" என்று கேட்டது.
உடனே அந்தக் கழுதைப்புலி, "மகனே, சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக் கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காகத்தான்" என்றது.
நம்மை விட வலிமையானவர்களிடம் வம்பிழுத்துத் துன்பமடைவதை விட, ஒதுங்கிச் செல்வது நல்லது.