அதிகாலை வேளை, சிங்கம் தனது குகையில் உறக்கம் கலைந்து வெளியே வந்தது.
அப்போது அந்த வழியாக வந்த நரி, “இப்போது நேரம் என்ன? என் கைக்கடிகாரம் ஓடவில்லை” என்று நேரம் கேட்டது.
உடனே அந்தச் சிங்கம், “உன் கைக்கடிகாரத்தை என்னிடம் கொடு, உனக்காக நான் அதைச் சரி செய்து தருகிறேன்” என்றது.
நரி, “கைக்கடிகாரத்தைச் சரி செய்வது மிகவும் கஷ்டமான காரியம்... உங்கள் நகங்கள் கொண்ட கையில் அதை சரி செய்தால்... அந்தக் கடிகாரம் அழிந்து போய்விடும்” என்றது.
ஆனால், சிங்கம் விடுவதாக இல்லை, “ஒன்றும் ஆகாது... நான் சரி செய்வேன்”
“நீண்ட நகங்கள் கொண்ட கையால் சரி செய்ய முடியாது” என்று நரி எவ்வளவோ சொல்லியும் சிங்கம் கேட்பதாக இல்லை.
"என்னால் சரி செய்ய முடியும்" என்று சொல்லி அந்தக் கடிகாரத்தை எடுத்துக் கொண்டு தன் குகைக்குள் நுழைந்தது.
சற்று நேரத்தில் வேளியே வந்தது. நரிக்கு ஒரே அதிர்ச்சி. ஓடாத கடிகாரம் நன்றாக ஓடிக் கொண்டிருந்தது.
நரி மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து தன் கடிகாரத்தை வாங்கிச் சென்றது. சிங்கம் சோம்பலை முறித்துக் கொண்டு மீண்டும் உறங்கத் தொடங்கியது.
அப்போது ஒரு ஓநாய் சிங்கத்தின் குகைக்கு வந்தது.
“இன்று உன் குகைக்குள் தொலைக்காட்சி பார்க்க வரலாமா? என் தொலைக்காட்சிப் பேட்டி உடைந்து விட்டது” என்று அந்த ஓநாய் கேட்டது.
“என்னிடம் உன் தொலைக்காட்சி பெட்டியை கொடு. நான் சரி செய்து தருகிறேன்” என்று சிங்கம் கூறியது.
ஓநாய் சிங்கம் சொன்னதை நம்பவில்லை.
“இதை நான் நம்புவேன் என்று நினைக்கிறாயா? எப்படி உன் நீண்ட நகங்கள் கொண்ட கையினால் சரி செய்வாய்?”
“கவலை வேண்டாம். என்னால் சரி செய்ய முடியும்” என்று கூறியது.
ஓநாய் தன் தொலைக்காட்சி பெட்டியைச் சிங்கத்திடம் கொடுத்தது.
சிங்கம் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியை தன் குகைக்குள் எடுத்து சென்றது.
சற்று நேரத்தில், தொலைக்காட்சி பெட்டியைச் சரி செய்து, அதனை ஓநாயிடம் கொடுத்தது.
தொலைக்காட்சியில் நன்றாக படம் தெரிந்தது. ஓநாய் மிகழ்ச்சியுடன் அதை வாங்கிக் கொண்டு, தன் இருப்பிடத்தை நோக்கிச் சென்றது.
இதில் உண்மையான காட்சி உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
சிங்கத்தின் குகைக்குள் ஆறு முயல்கள் இருந்தன. ஆறு முயல்களும் மென்மையான கைகளையும், நல்ல அறிவுத்திறனும் இருப்பதால் அந்தப் பணியை செம்மையாக முடித்தன.
சிங்கம் அவர்கள் செய்யும் வேலையை மேற்பார்வை மட்டுமே பார்த்தது.
குகைக்குள்ளிருக்கும் முயல்கள் சரி செய்யும் பணியைச் சரியாகச் செய்தன. சிங்கம் மேலாளர் பணியைச் சிறப்பாகச் செய்தது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.