ஒரு தீவில் வசித்த மீனவன் தினமும் அதிகாலையில் தன் படகில் சென்று மதிய வேளைக்குள்ளாகவேத் தேவையான மீன்களைப் பிடித்து வந்து, அருகிலுள்ள கிராமங்களில் விற்று விட்டு, வீட்டுக்குத் தேவையான பொருள்களுடன் வீடு திரும்புவான். மதியத்துக்கு மேல் மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பான்.
ஒரு நாள், அருகிலுள்ள நகரத்தைச் சேர்ந்த பயணி ஒருவர், அந்தத் தீவைச் சுற்றிப் பார்க்க விரும்பி அவனது படகிலேறி வந்தார். அப்போது அவர், அவனின் வாழ்க்கையைப் பற்றி விசாரித்தார். மீனவனும் தனது அன்றாட வாழ்க்கையைப் பற்றிச் சொன்னான்.
அப்போது அந்தப் பயணிக்கும், மீனவனுக்கும் இடையில் நடந்த உரையாடல் இதுதான்.
பயணி: தினமும் மதியத்துக்குள்ளாகவே திரும்புகிறாயே… இன்னும் சற்று நேரம் கூடுதலாக மீன் பிடித்தால் அதிக வருவாய் கிடைக்குமே...!
மீனவன்: அதிகப் பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறேன்?
பயணி: அதிகப் பணத்தில் இன்னொரு படகு வாங்கலாம். அதைப் பயன்படுத்தி நிறைய மீன் பிடிக்கலாம்.
மீனவன்: மீன் பிடித்து... என்ன செய்வது...?
பயணி: அவற்றை மிகுந்த பொருளுக்கு விற்றால் பெரிய மீன்பிடி கப்பல் வாங்கும் அளவுக்குப் பணம் கிடைக்கும்...
மீனவன்: சரி அப்புறம்…
பயணி: நீயே பெரிய மீன் சந்தையை உருவாக்கி, மீன்களை மொத்தமாக விற்றுப் பெரும் பணம் சம்பாதிக்கலாம்
மீனவன்: சரி பிறகு...
பயணி: பிறகு என்ன, அந்தப் பெரும் பணத்தைக் கொண்டு, மனைவி, குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம்… நீயும் மகிழ்ந்திருக்கலாம்…
மீனவன்: அப்படித்தானே இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
அதன் பிறகு, அந்தப் பயணிக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.
தேவைக்கு அதிகமாகப் பொருள் சேர்ப்பது கூட, அடுத்தவருக்குப் போய்ச் சேரவேண்டிய பொருளைத் திருடி வைத்துக் கொள்வதற்குச் சமமே...!