கிராமத் தலைவராயிருந்த ஒருவருக்கு விபத்து ஒன்றில் அவருடைய கால்கள் இரண்டும் இழக்க வேண்டியதாகி விட்டது.
அவர் ஊன்று கோல்களின் உதவியுடன் நடக்கத் துவங்கினார். பழக்கத்தினால், வேகமாக நடக்கத் துவங்கினார். அந்த ஊன்று கோல்களுடன் நடனம் கூட ஆடினார்.
கிராமத்திலிருந்த குழந்தைகளையும், கால்கள் இருந்தாலும் அவர்கள் ஊன்று கோல்களின் உதவியுடன் தான் நடக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தினார்.
குழந்தைகளும் அப்படியே கால்களிருந்தும் ஊன்றுகோல்களின் உதவியுடனேயே நடக்கத் துவங்கினர். கடைசியில் ஊன்றுகோலுடன் இருப்பதே அந்த கிராமத்தின் அடையாளச் சின்னமாகி விட்டது.
இப்படியே நான்கு தலைமுறைகள் கடந்து விட்டது.
அந்த கிராமத்து மக்கள் கால்களால் நடப்பதையே அறியாமல் போய்விட்டனர். கிராமப்பள்ளிகளில் இது ஒரு பாடமாகவே கற்பிக்கப்பட்டது.அங்கு ஊன்றுகோல் தயாரிப்பது ஒரு முக்கியத் தொழிலாகவே ஆகி விட்டது.
வேற்று நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் அக்கிராமத்தினரைச் சந்தித்து, "உஙகள் அனைவருக்கும் கால்கள் இருந்தும் ஊன்றுகோல் உதவியுடன் ஏன் நடக்கிறீர்கள்?" என்று கேட்டான்.
அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டு வியந்தார்கள்.
" இவன் புத்திசாலி போல் பேசுகிறான்..." என்று சொல்லிக் கொண்டே , "எப்படி நடப்பது , என்று நடந்து காட்டுங்கள்" என்றார்கள்.
இளைஞன் அடுத்து ஒருநாள் அந்த ஊர் பஞ்சாயத்துக் கூட்டம் நடக்கும் இடத்தில் நடந்து காட்டுவதாகத் தெரிவித்தான்.
அந்த இளைஞன் சொன்ன நாளில் எல்லோரும் கூடினர்.
முதலில் ஊன்றுகோல் உதவியோடு நடந்து காட்டிய இளைஞன் ஊன்றுகோல் இல்லாமல் நடந்து காட்ட நினைத்தான். மற்ற அனைவரும் அவன் கால்களால் நடக்க முடியாது என்கிற அவநம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
நடுவில் வந்தவுடன் அவன் ஊன்று கோல்களைக் கீழே போட்டான். அந்த இடத்தில் அமைதி நிலவியது. அந்த இளைஞன் நடக்க முயன்றான். ஆனால், அவனால் நடக்க முடியவில்லை. குப்புற விழுந்தான். அவனையும் அவநம்பிக்கை தொற்றிக் கொண்டது.
இதைப் பார்த்தவுடன் "ஊன்றுகோல் உதவியில்லாமல் நடக்கவே முடியாது" என்கிற நம்பிக்கை உறுதிப் படுத்தப் பட்டது.