நியூயார்க் நகரில் இருக்கும் அந்தப் புகழ் பெற்ற வங்கிக்குள் நுழைந்த ஒருவர் அங்கிருந்த அதிகாரியிடம் தனக்கு 5000 டாலர்கள் கடன் வேண்டும் என்றும், தான் இந்தியாவிற்கு இரண்டு வாரப் பயணமாக செல்வதாகவும் திரும்பி வந்து கடன் பணத்தைக் கட்டிவிடுவதாகவும் சொன்னார்.
அதற்கு அந்த அதிகாரி, “உங்களுக்குக் கடன் கொடுக்க வேண்டுமெனில், நீங்கள் அதற்கு ஏதாவது உத்தரவாதம் கொடுக்க வேண்டும்” என்றார்.
அதைக் கேட்ட அவர் வங்கிக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த தனது புத்தம்புதிய ஃபெராரி கார் சாவியை அந்த அதிகாரியிடம் கொடுத்தார். கூடவே காரின் உரிமைப் பத்திரங்களையும் கொடுத்தார்.
வங்கி அதிகாரி திருப்தியுடன் அவருக்கு, அவர் கேட்ட கடனை கொடுத்தார்.
2, 50, 000 டாலர் மதிப்புள்ள ஃபெராரி காரை வெறும் 5000 டாலர் கடன் வாங்கப் பயன்படுத்திய அவரை நினைத்து வங்கியின் தலைவரும் மற்ற அதிகாரிகளும் அனுபவித்து சிரித்தனர்.
பிறகு வங்கியின் ஊழியர் ஒருவர் அந்தக் காரை வங்கியின் கீழ்தளத்தில் உள்ள கார்கள் நிறுத்துமிடத்திற்குக் கொண்டு சென்று நிறுத்தினார்.
இரண்டு வாரங்கள் கழித்து திரும்பி வந்த அவர், அந்த வங்கிக்குச் சென்று தான் வாங்கிய 5000 டாலரையும், அதற்கான வட்டியாக 5.41 டாலரையும் திருப்பிக் கொடுத்தார்.
அவருக்குக் கடன் கொடுத்த அந்த வங்கி அதிகாரி, "சார், உங்களுடன் வியாபாரம் செய்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. நமது பரிவர்த்தனை மிக நல்ல முறையில் நடந்தது. ஆனா ஒரே ஒரு விசயம்தான் எங்களுக்கு இன்னும் புரியவில்லை, நீங்க போன பிறகு உங்களைப் பற்றி நாங்க விசாரிச்சோம். நீங்க ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று தெரிந்தது. இவ்வளவு பெரிய பணக்காரர் கேவலம் 5000 டாலர் கடன் வாங்குகிறாரே என்று எங்களுக்கு ஒரே குழப்பம்" என்றார்.
அதற்கு அவர், "எனக்கு நியூயார்க் நகரத்தில் கார் நிறுத்தும் வசதி இல்லை. பிறகு எங்கு கொண்டு போய் நான் எனது காரை இவ்வளவு குறைந்த 5.41 டாலர் கட்டணத்திற்கு அதுவும் நான் திரும்பி வரும் வரை யாரும் திருடிக்கொண்டுப் போகாமல் பாதுகாப்பாக நிறுத்த முடியும்" என்றார்.