இறைவன் கண்ணனிடம் அடியவர் ஒருவர், “இந்த உலகில் நல்லவர்கள் உள்ளார்களா? கெட்டவர்கள் உள்ளார்களா?” என்று கேட்டார்.
“நான் சொல்வதை விட நாமே பார்த்துத் தெரிந்து கொள்ளலாமே” என்ற கண்ணன் அந்த அடியவரை அழைத்துக் கொண்டு அத்தினாபுரத்திற்குச் சென்றார்.
அவர்கள் இருவரும் முதலில் தர்மனிடம் சென்றனர்.
கண்ணன் தருமனிடம், “எனக்குக் கெட்டவன் ஒருவன் தேவை. எங்கே இருந்தாலும் கண்டுபிடித்து அழைத்து வா!” என்றார்.
நீண்ட நேரம் கழித்துத் திரும்பிய தர்மன், “இந்த நாட்டில் எல்லோரும் நல்லவர்களாகவே உள்ளனர். கெட்டவர்கள் யாருமே இல்லை. கெட்டவன் ஒருவனையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை” என்றான்.
அதன் பிறகு துரியோதனனை அழைத்த கண்ணன், “அத்தினாபுரத்தில் உள்ள எல்லோருமே நல்லவர்கள். கெட்டவன் ஒருவனையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றான் தருமன். நீ சென்று ஒரு நல்லவனை அழைத்து வா.” என்றான்.
நீண்ட நேரத்திற்குப் பிறகு திரும்பிய துரியோதனன், “இந்த நகரத்தில் எல்லோரும் தீயவர்களாகவே உள்ளனர். நல்லவன் ஒருவனையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை” என்றான்.
தன்னுடன் வந்த அடியவரிடம், “நீ கேட்ட கேள்விக்கு இப்பொழுது பதில் தெரிந்து விட்டதா?” என்று கேட்டார் கண்ணன்.
“நாம் நல்லவர்களாக இருந்தால், இந்த உலகத்தில் உள்ள எல்லோரும் நல்லவர்களாகத் தெரிவார்கள். நாம் கெட்டவர்களாக இருந்தால் எல்லோரும் கெட்டவர்களாகத் தெரிவார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்” என்றார் அந்த அடியவர்.