தன் மகன் பரதன் உள்பட அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்பட்டுத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுப் பதினான்கு வருடங்கள் மனத்துயரை அனுபவித்தவள் கைகேயி. இறுதியில் அனுமன் வாயிலாக அவளின் தியாக உள்ளம் வெளிப்படுகிறது.
இராவண வதம் முடிந்து சீதை, லக்ஷ்மணர், வானர, ராட்சசப் படைகளுடனும் அவர்களின் குடும்பத்தினருடனும் இராமர் புஷ்பக விமானத்தில் அயோத்திக்குத் திரும்பும் வழியில் பரத்வாஜ முனிவரின் அழைப்பை ஏற்று அவருக்கு ஏற்கெனவே வாக்களித்தபடி இரவு அங்கு தங்கினார். விடிந்தால் பதினான்கு வருடங்கள் முடிந்த நிலையில் பரதனும், சத்ருகனனும் அக்னிப்பிரவேசம் செய்யக்கூடும் என்பதால் அவர்களைத் தடுத்து நிறுத்தி, தான் வந்து கொண்டிருக்கும் செய்தியைக் கூற அனுமன் இராமரால் அனுப்பப்பட்டார்.
அவரும் நந்திகிராமத்துக்கு வந்து அவர்கள் நெருப்பில் வீழ்வதிலிருந்து காத்த பிறகு, பரதனிடம், “அம்மா எங்கே? வணங்க வேண்டும்” என்றார். பரதனும், “இராமனைப் பெற்ற பாக்கியசாலி அன்னை கௌசல்யை இதோ...” எனக் காட்டினான். அவளை வணங்கியபின் மறுபடி “அம்மா எங்கே? வணங்க வேண்டும்” என்றார். “இராமனைக் கணமும் பிரியாது சேவை செய்த பாக்கியசாலி லட்சுமணனையும், என் தம்பி சத்ருகனனையும் பெற்ற அன்னை சுமித்ரை, இதோ இவர்” எனக் காட்டினான் பரதன். அவளையும் வணங்கிய பின்னரும், வெளிப்படையாக, “உன்னைப் பெற்ற தியாகி, அன்னை கைகேயி எங்கே? வணங்க வேண்டும்” என்றார் அனுமன்.
துணுக்குற்ற பரதன், “அவள் மகாபாவியாயிற்றே. அவளுக்கு மகனாகப் பிறக்கும் அளவுக்குப் பாபம் செய்து விட்டேனே! என நான் வருந்தாத நாளில்லை. அவளை நீங்கள் ஏன் வணங்க வேண்டும்?” எனக் கேட்டான்.
அப்போது அனுமன் பின்வருமாறு பிறர் அறியாத கைகேயியின் பெருமைகளைக் கூறினார்.
“பரதா! நீயோ இந்த உலகமோ அவளை அறிந்து கொண்ட லட்சணம் இவ்வளவுதான். உன் தாயார் எவ்வளவு தன்னலமற்ற தியாகி தெரியுமா?”
தசரதரின் தாயார் இந்துமதி மிகுந்த இளகிய மனம் படைத்தவள். செடி, கொடிகளிலும் உயிரோட்டத்தை உணர்ச்சிகளைக் கண்டவள். அவளுடன் ஒரு நாள் சிறுவன் தசரதன் உத்யானவனத்தில் திரிந்தபோது, தளதளவெனப் பொன்னிறத்தில் மினுமினுத்த தளிர் ஒன்றைக் கொடியிலிருந்து ஒடித்து விட்டான். ஒடித்த இடத்திலிருந்து பால் வடிவதைக் கண்டு பதறிய இந்துமதி, “தன் குழந்தையான தளிரைப் பிரிந்து இந்தக் கொடி எப்படி கண்ணீர் வடிக்கிறதோ, அப்படியே உன் மகனைப் பிரிந்து நீ கண்ணீர் வடித்து மடியக் கடவாய்” எனச் சாபமிட்டாள்.
பின்னர் இளைஞனாகத் தசரதன் வேட்டைக்குச் சென்ற இடத்தில் ரிஷிகுமாரனான சிரவணன் குடுவையில் தன் தாய் தந்தையின் தாகம் தீர்க்கத் தண்ணீர் மொள்ள, அதை யானை தண்ணீர் குடிப்பதாகக் கருதி சப்தவேதி என்னும் அஸ்திரத்தினால் அவனைக் கொன்றதனால், “உயிர் நீங்கும் முன் புத்திர சோகத்தினால் உயிர் நீங்கக்கடவாய்” என்று அவனது கண்ணிழந்த தாய் தந்தையால் தசரதர் சபிக்கப்பட்டார்.
தசரதர் பெற்ற இவ்விரண்டு சாபங்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தாள் கைகேயி.
தசரதர் இராமருக்கு எவ்வளவு சீக்கிரம் பட்டம் கட்ட முடியுமோ அவ்வளவு விரைவில் முடிசூட்ட நிச்சயித்து, தன் அரசவை ஜோதிடர்களை வற்புறுத்தி, குறித்த முகூர்த்தத்தின் பின்விளைவுகளை, பல கலைகளும் சாஸ்திரங்களும் அறிந்த தன் தந்தையிடமிருந்து, தான் முழுமையாகக் கற்றிருந்த ஜோதிடத்தின் மூலம் கோசல ராஜ்ஜியத்தின் ஜாதகத்தினை ஆராய்ந்து நன்கு அறிந்திருந்தாள் கைகேயி.
அந்த முகூர்த்தப்படி இராமர் பட்டாபிஷேகம் நிகழ்ந்திருந்தால், அரசனாக இராமன் அன்று அமர்ந்திருந்தால், அதுவே அவனது ஆயுளை முடிந்திருக்கும். புத்ரசோகம் தசரதனையும் முடித்திருக்கும். புத்ரசோகம் எப்படியும் நிகழ வேண்டும் எனும் போது, அது இராமனை விட்டுத் தற்காலிகப் பிரிவா? நிரந்தரப் பிரிவா? என்பதுதான் பிரச்னை. தனக்கு கணவரை இழக்க நேரிடும் என்று தெரிந்திருந்தும் இராமனின் உயிரைக் காப்பாற்ற நிச்சயித்தாள் உன் அன்னை.
அந்தக் கணத்தில் அரசனாக இருப்பவன் உயிர் நீப்பது இராஜ்யத்தின் ஜாதக அமைப்பின்படி நிச்சயம் என்ற நிலையில், ஏற்கெனவே பல ஆண்டுகள் அரசனாக இருந்து அனுபவித்து முதியவனாகிவிட்ட தசரதன் உயிர் நீப்பதே மேல் என அவள் எண்ணினாள். அப்போது கூட அவள் கேட்க விரும்பியது பதினான்கு நாட்கள் வனவாசம். ஆனால், வாய்தவறி அது பதினான்கு வருடங்கள் என வந்துவிட்டது. ஒரு கணம்கூட இராமனைப் பிரிவதைச் சகிக்காத தசரதருக்கு இதுவே உயிரைக் கொல்லும் விசமாகிவிட்டது.
எந்தப் பெண் தன் சுமங்கலி நிலையை இழந்து, மாற்றான் மகனைக் காப்பாள்? இராமனிடம் கைகேயி கொண்ட அன்பு அத்தகையது. நீ ராஜ்யத்தை ஏற்க மாட்டாய் என அவளுக்குத் தெரியும். ஆகவேதான், அத்தகைய வரத்தைக் கேட்டாள். ஒருகால் நீ ஏற்றால் இராமனின் உயிர் காக்க உன்னையும், இழக்க அவள் தயாராக இருந்தாள். அவள் பெரும் தியாகி. அவளால்தான் எங்கோ வனத்தில் கிடந்த எங்களுக்கெல்லாம் இராமனின் தரிசனம் கிட்டியது. கர-தூஷணர் முதலாக இராவணன் வரை பல ராட்சசர்களின் வதமும் நிகழ்ந்தது. அந்தப் புனிதவதியைத்தான் நாம் அனைவரும் வணங்க வேண்டும்” என்றார் அனுமன்.
பரதன் முதலானவர்களுக்கு அப்போதுதான் கைகேயின் உண்மை உருவம் புரிந்தது.