ஒரு கிராமத்தில் கோவில் திருவிழாவிற்கு நாதஸ்வரக் கச்சேரி யார் செய்வது? என்ற பிரச்சினை ஏற்பட்டது.
ஒரு சாரார் உள்ளூர் வித்வானைப் போட வேண்டும் என்று சொல்ல, வேறு சிலர் வெளியூர்க்காரர் ஒருவரை இந்த வருடம் கச்சேரி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறினர்.
இறுதியில் திருவிழாவிற்கு முன் இருவருக்கும் ஒரு போட்டி வைப்பது என்றும் யார் சிறப்பாக வாசிக்கிறார்களோ, அவருக்கே திருவிழாவில் வாய்ப்பு கொடுப்பது என்று முடிவாகியது.
உள்ளூர்க்காரர் நாதஸ்வரம் வாசிப்பதில் சுமார் ரகம்தான். வெளியூர்க்காரரோ மிகுந்த திறனுடையவர், பல்வேறு பரிசுகளைப் பெற்றவர். எனவே, உள்ளூர்க்காரருக்கு நடுக்கம் ஏற்பட்டது. போட்டியில் தோல்வியுற்றால் பின்னர் அவர் எங்குமே வாசிக்க முடியாது என்ற நிலை ஏற்படும். முக வாட்டத்துடன் காணப்பட்ட அவரைப் பார்த்து, அவரது மகன் அவருடைய வருத்தத்திற்கான காரணத்தைக் கேட்டான்.
விசயத்தைத் தெரிந்து கொண்ட சிறுவன் தந்தையிடம், ''நீங்கள் கவலைப்படாமல் போட்டியில் வாசியுங்கள். மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்றான் .
அவருக்கோ ஒன்றும் புரியவில்லை. எனினும், அவன் சொன்னபடி போட்டியில் முதலில் அவர் வாசித்தார். பின் வெளியூர்க்காரர் வாசிக்க ஆரம்பித்தார்.
இப்போது உள்ளூர்க்கரரின் மகன் அவர் நேர் எதிரில் உட்கார்ந்து கொண்டு, புளித்த ஒரு மாங்காயை வாயில் வைத்துக் கடித்து சப்புக் கொட்ட ஆரம்பித்தான். வாசிக்க ஆரம்பித்தவருக்கு நாவில் எச்சில் ஊற ஆரம்பித்தது. அந்தப் புளித்த வாடைக்கு எச்சில் அத்கமாக ஊற, வாசிக்க முடியாமல் திணறினார். ஸ்...என்ற சப்தம் மட்டுமே வந்தது.
வெளியூர் நாதஸ்வரக்காரர் தோல்வியடைந்தார்.
இக்கட்டான சூழ்நிலைகளில் மனத்தைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் பிரச்சினைதான் ஏற்படும் என்பதைத் தெரிந்து கொண்டால் சரி...