வணிகர்கள் பலர் வண்டிகளில் பொருள்களை ஏற்றிக் கொண்டு பக்கத்து நாட்டிற்குப் புறப்பட்டார்கள். அவர்கள் காட்டு வழியாக சென்று கொண்டிருந்தார்கள்.
அந்த வழியே வந்த துறவி ஒருவர் பசிக்கு ஏதாவது உணவு கிடைக்குமா என்ற எண்ணத்துடன் அவர்களைப் பின் தொடர்ந்தார்.
இரவு நேரம் வந்துவிட்டது.
வணிகர்கள் அனைவரும் காட்டிற்குள் ஓரிடத்தில் தங்கினார்கள்.
துறவியோ சிறிது தூரத்திலிருந்த மரத்தடியில் நின்றார். பின் அவர் கடவுளை நினைத்துக் கொண்டு அங்குமிங்குமாக உலாவிக் கொண்டிருந்தார்.
வணிகர்களைக் கண்ட திருடர்கள் அவர்களைத் தாக்கிக் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அங்கு வந்தனர்.
திருடர்களின் தலைவன், "அதோ அங்கு ஒருவன் உலாவியபடியே இருக்கிறான். அவர் எச்சரிக்கை தந்தால் வணிகர்கள் கவனமாகி நம்மை எதிர்த்துத் தாக்கத் தொடங்கி விடுவார்கள். அவன் தூங்கும் வரை காத்திருப்போம்" என்றான்.
பொழுது விடும் வரை துறவி உலாவியபடியே இருந்தார்.
எரிச்சலடைந்த திருடர்கள் உரத்த குரலில், "வணிகர்களே! இவன் மட்டும் இரவு முழுவதும் விழித்துக் காவலிருக்காவிட்டால் நீங்கள் யாரும் உயிருடன் இருந்திருக்க மாட்டீர்கள்" என்று கோபத்துடன் சப்தமிட்டபடி சென்று விட்டனர்.
துறவியிடம் வந்த வணிகர்கள், "நேற்றிரவு நீங்கள் அந்தத் திருடர் கூட்டத்தைப் பார்த்தீர்களா?" என்று கேட்டார்கள்.
"ஆமாம். பார்த்தேன்" என்றார்.
"அவ்வளவு திருடர்களையும் பார்த்த போது உங்களுக்குப் பயமாக இல்லையா?"
"நான் எதற்குப் பயப்பட வேண்டும். என்னிடம்தான் பணமோ பொருளோ இல்லையே... செல்வம் வைத்திருப்பவர்கள்தான் திருடர்களைப் பார்த்துப் பயப்பட வேண்டும்" என்றார்.