ஒரு முனிவருக்கு மாம்பழம் கிடைத்தது. அந்த மாம்பழம் சாப்பிட்டவர்கள் நீண்ட காலம் வாழ்வர்.
முனிவர் அம்மாம்பழத்தைத் தான் சாப்பிடுவதை விட, மக்களுக்கு நல்லது செய்யும் மன்னன் பத்ருஹரி சாப்பிட்டால் நல்லது என்று எண்ணி அவனிடம் கொடுத்தார்.
மன்னனோ, அதைத் தான் சாப்பிடுவதை விட, தன் மீது உயிரையே வைத்திருக்கும் மனைவி சாப்பிட்டால் நல்லது என்று எண்ணி அவளிடம் கொடுத்தான்.
அவளோ மாம்பழத்தைத் தான் உண்ணாது, தன் ஆசை நாயகனான நொண்டியும் கூனனுமான குதிரைக்காரனிடம் கொடுத்தாள்.
அவனோ, அவன் மனைவி நீண்ட நாள் வாழ வேண்டும் என்று கருதி அதை மனைவியிடம் கொடுத்தான்.
அந்தப் பெண் மிக நல்ல பெண். அவள், தான் நீண்ட காலம் வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறோம், இந்த நாட்டை ஆளும் மன்னன் சாப்பிட்டால் மக்கள் அனைவருக்கும் நல்லது என்று கருதி மாம்பழத்தை அதன் சிறப்பை விளக்கி மன்னனிடம் கொடுத்தாள்.
மன்னன் அதிர்ச்சி அடைந்தான்.
பழம் எப்படித் தன் கைக்கே திரும்ப வந்தது என்று விசாரித்தான்.
அடுத்த நாள் அவன் கூறாமல் சன்யாசம் பூண்டான்.
காதல் ஒரு சில நியாயங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். முறையற்ற உணர்வுகளைக் காதல் என்று நினைத்தால் சீரழிவுதான்.