குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன் கிருஷ்ணரிடம், “கிருஷ்ணா, நான் குருடனாக இருந்த போதும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்து போனதன் காரணம் என்ன?” என்று கேட்டார்.
கிருஷ்ணர் அவரிடம், “ உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன். அதற்குப் பதில் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன்” என்றார்.
திருதராஷ்டிரரும் கதையைச் சொல்லச் சொன்னார். கிருஷ்ணரும் கதை சொல்லத் தொடங்கினார்.
“நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் ஏழ்மை நிலையிலிருந்த ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையாகச் சமைப்பது, அவரைச் சிறப்பாகக் கவனிப்பது என அவன் எடுத்துக் கொண்ட பல்வேறு முயற்சிகளினால் விரைவில் அவர்ன் தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.
அதன் பிறகு, அவன் அரசருக்கு வித்தியாசமான சுவையை செய்து கொடுத்து பரிசு பெறுவதில் ஆர்வம் காட்டினான். அப்போது அவனுக்கு விபரீதமான யோசனை ஒன்று தோன்றியது.
அதன்படி அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய்ச் சமைத்து அரசருக்குப் பரிமாறினான். தான் சாப்பிடுவது எதுவென்று தெரியாமல் அச்சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி சமைக்குமாறு கட்டளையிட்டார். அதோடு அந்தச் சமையல்காரனுக்கு பெரும் பரிசுகளையும் அளித்தார்”
என்று சொல்லி நிறுத்திய கிருஷ்ணர் திருதராஷ்டிரனிடம், “தவறு செய்த சமையல்காரன், தவறு அறியாமல் அதனைச் சாப்பிட்ட அரசன். இவர்களிருவரில் அதிகம் தவறு செய்தவர் யார்?” என்று கேட்டார்.
உடனே திருதராஷ்டிரர், “வசிஷ்டரின் சமையல்காரன், தான் அறியாமலே இறைச்சி கலந்த உணவை அவருக்கு வைத்துவிட்டார். ஆயினும் அதை வசிஷ்டர் கண்டுபிடித்து, அவனுக்குச் சாபமிட்டார், அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லை. சமையல்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டு தவறு செய்தான். அதனால், அவன் செய்த தவறு சிறியது. ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காமல் அதிகம் தவறு செய்தவன் அரசனே” என்றார்.
அதைக்கேட்டு சிரித்த கிருஷ்ணர், “திருதராஷ்டிரா, நீ ஓர் அரசனாக இருந்த போதும், நியாயம் தவறாமல் மன்னன் செய்ததே தவறு எனக் கூறினாய். அத்தகைய நீதிதான் பீஷ்மர், துரோணர் போன்ற சான்றோர் சபையில் உன்னை அரசனாக அமர்த்தியது. நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது. ஆனால், நான்சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான். சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய். அந்த அன்னக் குஞ்சுகளைக் காணாமல், தாய் அன்னங்கள் எவ்வளவு வேதனை அடைந்திருக்கும் என்பதை, உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்து கொள்கிறாய். ஆனால் தினம் தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம் உனக்கு கண் எதற்கு? அதனாலேயே நீ இப்பிறவியில் குருடனாய்ப் பிறந்தாய். இறைவன் முன்பு ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்” என்றார்.
தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான்.
இதைத்தான் நாம் செய்த தவறுகள் நம் பிள்ளைகளைச் சேரும் என்கின்றனர்.