* கஞ்சனுக்குப் பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்குக் கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.
* கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்தப் பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்குப் பாரம்.
* வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட, புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.
* பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.
* பெரிய யானை சிறிய அங்குசத்தைக் கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உளியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தைக் கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.
* வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்புத் தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.
* சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்தூய்மை வராது.
* கல்வி கற்கும் மாணவன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அவை; காமம், கோபம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிகத் தூக்கம், உடலைப் பராமரிக்க அதிக அக்கறை.
* தேனீக்களைப் பார்த்துக் கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டுத் தேடிய தேனை அது உண்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்துத் தேனைத் தூக்கிச் செல்கிறான். அது போல் நாம் பார்த்துப்பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களைச் செய்யுங்கள்.
* யானையிடம் இருந்து ஆயிரம் அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து நூறு அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து பத்து அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டுச் சென்று விடுங்கள்.
* எல்லாக் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.
* அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திருக்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதைப் புரிந்து கொள்ளுங்கள்.
* சிங்கத்தில் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.
* அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்.
* வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பிப் பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.
* அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டுப் போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டுப் போகும். முறையாகக் கற்காத கல்வி கெட்டுப் போகும். சரியாகப் பயன்படுத்தாத பணம் கெட்டுப் போகும்.
* கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பைத் தேடித் தருகிறது. ஆதலால், கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.
* எருக்கம் பூ அழகாக இருந்தாலும், அது சிறப்பான வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீணான மனிதன் ஆவான்.
* மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய்க் காவலர்கள், வீட்டைக் காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.
* பாம்பு, அரசன் , புலி, கொட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களைத் தூங்கும் போது எழுப்பக் கூடாது.
* பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.
* கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்குக் கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்குக் கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்குக் கூறும் அறிவுரையும் பயனற்றது.
* ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதைப் போன்றது, இது நிச்சயம் மரணத்தைத் தரும்.
* ஒருவன் தன்னுடைய கஷ்டக் காலத்திருக்கு தேவையானப் பணத்தை முன்பேக் காக்க வேண்டும்.
* வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களைக் கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.
* கூரிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரசக் குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்பக் கூடாது.
* ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றைப் பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.
* அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்குச் சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பைத் தேடித் தருவான்.
* ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.
* நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும், கல்வி கற்காவிடில் ஒருவன் வாசனையற்ற மலரைப் போன்றவன் ஆவான்.
* உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.
* கற்பது பசுவைப் போன்றது, அது எல்லாக் காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயைப் போன்றது எங்கு சென்றாலும் நம்மைக் காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாகச் செல்ல வேண்டாம்.
* காமத்தை விடக் கொடிய நோய் இல்லை. அறியாமையை விடக் கொடிய எதிரி இல்லை. கோபத்தை விடக் கொடிய நெருப்பு இல்லை.
* எவன் ஒருவனுக்குச் செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத்தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.
* பிறவிக் குருடனுக்குக் கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்குக் கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்குக் கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்குப் பாவம் தெரியாது.
* பேராசை கொண்டவனைப் பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனைச் சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.
* அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.
* ஒருவன் தனக்குக் கிடைக்கும் மனைவி, உணவு, நியாயமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.