1. 'இவன் என்னைச் சேர்ந்தவன், அவன் மாற்றான்' என்றெல்லாம் குறுகிய மனப்பான்மையுள்ளவர்கள் கருதுகிறார்கள். பரந்த மனப்பான்மை உள்ளவர்களுக்கு உலகம் முழுவதுமே தன் குடும்பம்.
2. நண்பன், பகைவன் என்ற வேறுபாடு உலகியல் விவகாரம் காரணமாக ஏற்படுகிறது. ஆபத்துக் காலத்தில் நண்பனையும், போரில் வீரனையும், செல்வம் இழந்தபோது மனைவியையும், கஷ்ட காலத்தில் உறவினர்களையும் தெரிந்துகொள்ளலாம். மகிழ்ச்சியான காலத்திலும், கஷ்ட காலத்திலும், அரண்மனை வாயிலிலும், சுடுகாட்டிலும் எவன் நம்முடன் இருக்கிறானோ அவன் மட்டுமே உண்மையான உறவினன்.
3. தீயவர்களுடன் நட்பு, பகை இரண்டையுமே வைத்துக் கொள்ளக் கூடாது. கனல் சூடாக இருக்கும்போது தொட்டால் கை சுடும்; அணைந்து குளிர்ந்து கரியானால் கையில் கரியாகும். அதுபோல் துஷ்டனுடன் எந்த உறவும் கெடுதலையே விளைவிக்கும்.
4. செய்ய முடியாததை எப்போதும் செய்ய முடியாது. செய்யக் கூடியதை எப்போதும் செய்ய முடியும். சமுத்திரத்தில் வண்டியும், தரையில் ஓடமும் செல்லாதல்லவா?
5. துஷ்டர்கள் மனதில் ஒன்று, பேச்சில் வேறொன்று, செயலில் இன்னும் வேறொன்று என்று இயங்குவார்கள். நல்லோர்கள் மனதிலும் வாக்கிலும் செயலிலும் ஒரே மாதிரியாக இயங்குவார்கள்.
6. கடன் கொடுப்பவன், வைத்தியன். படித்தவன், நீரோடு கூடிய நதி இந்த நான்கும் இல்லாத ஊரில் வாழக் கூடாது.
7. சிறுவனோ, முதியவரோ யாராக இருந்தாலும், நம் வீட்டிற்கு வந்தால் அவர்களை முறைப்படி வரவேற்று உபசரிக்க வேண்டும். ஏனென்றால் வீட்டிற்கு வந்தவன் எல்லோருக்கும் குரு.
8. உலகில் பணமுடையவன் பலவானாகிறான். அரசன் கூட பணத்தினால்தான் பிரபு ஆகிறான். பணமுள்ளவனுக்கு நண்பர்களும், உறவினர்களும் இருக்கிறார்கள். பணமுள்ளவன்தான் இந்த உலகில் மனிதன், படித்தவன் என்று மதிக்கப்படுகிறான்.
9. குழந்தைகளும் நண்பர்களும் இல்லாதவனுக்கு வீடு சூன்யம். துஷ்டனுக்கு திசைகள் சூன்யம். தரித்திரனுக்கு எல்லாமே சூன்யம்.
10. நீர், நெருப்பு, ஆயுதம், பசி, பிணி, மலையிலிருந்து வீழ்ச்சி இப்படி ஏதாவது ஒரு காரணத்தால் உடல் படைத்தவன் உயிரை விடுகிறான்.
11. பற்கள், தலைமயிர், நகங்கள் ஆகியவற்றைப் போல் அரசன், பெண்கள், அமைச்சர்கள், மேகங்கள் ஆகியவை தாங்கள் இருக்க வேண்டிய இடத்தை இழந்தால் பிரகாசிப்பதில்லை.
12. சுகமோ துக்கமோ வந்ததை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இவை இரண்டும் சக்கரம் போல் சுழல்பவை.
13. தானும் அனுபவிக்காமல், தானமும் கொடுக்காமல் காப்பாற்றும் பணம், எதிரியை வெல்ல முடியாத சேனை, தர்மம் அனுஷ்டிக்க உதவாத படிப்பு, புலனடக்கமில்லாதவன் உயிர் இவையெல்லாம் வீண்.
14. சமுத்திரத்தில் மூழ்கினாலும், மலை உச்சியிலிருந்து விழுந்தாலும், கொடிய பாம்பு கடித்தாலும் ஆயுள் காப்பாற்றப் படும் (ஆயுள் முடியாதவன் இறப்பதில்லை).
15. எவர் வாழும்போது நண்பர்கள், உறவினர்கள் ஆகியவர்களையும் பாதுகாத்து மகிழ்ச்சியுடன் வாழ்கிறாரோ அவர் வாழ்வுதான் நல்வாழ்வு. சுய நலத்துடன் தனக்காக எல்லோரும்தானே வாழ்கிறார்கள்! அதில் என்ன சிறப்பு இருக்கிறது?
16. அழகு, அழகில்லாதது என்று ஒன்றும் கிடையாது. எவனுக்கு எது பிடித்திருக்கிறதோ அது தான் அவனுக்கு அழகாகத் தோன்றும்.
17. காலத்திற்கு ஒவ்வாததை பிரகஸ்பதியே சொன்னாலும் அவமதிப்பும் அவமானமும் அடைகிறார். மனதிற்கு இனியதைச் சொல்பவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். மனதிற்குப் பிடிக்காததும், ஆனால் உண்மையான நன்மை தரக் கூடியதுமானதைச் சொல்பவனும், கேட்பவனும் கிடைப்பதரிது. இவ்வாறு சொல்பவர்களும், கேட்பவர்களும் எங்கிருக்கிறார்களோ அங்கு எல்லாச் செல்வங்களும் நிலைத்திருக்கின்றன.
18. ஆபத்து சமயத்திலும், வழி தவறிச் செல்லும் போதும், செய்ய வேண்டியதை யஜமானன் கேட்காவிட்டாலும், அவரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
19. அரசன் போற்றும் மனிதனை எல்லோரும் போற்றுகிறார்கள். அரசன் அவமதிக்கும் மனிதனை எல்லோரும் அவமதிக்கிறார்கள்.
20. சூரியன் இல்லாதபோது விளக்கு வெளிச்சம் தருவது போல், நல்லதைச் சொல்பவன் சிறுவனாக இருந்தாலும் அவன் சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
21. வரவைக் கவனிக்காமல் தன் இஷ்டம் போல் செலவு செய்பவனின் பொக்கிஷம் - அவன் குபேரனைப் போல் செல்வம் படைத்தவனாக இருந்தாலும் கூட, விரைவில் அழிந்துவிடும்.
22. பகைவர்களிடமும், நண்பர்களிடமும் தயை காட்டுவது சந்நியாசிகளுக்கு அலங்காரம் (அணிகலன்). குற்றம் செய்தவர்களிடம் பொறுமை காட்டுவது அரசர்களுக்கு அலங்காரம்.
23. பால் குடிப்பது பாம்புகளின் விஷத்தை வளர்ப்பது போல், நல்ல அறிவுரைகள் துஷ்டர்களின் கோபத்தை வளர்க்கவே செய்யும்.
24. பழங்களும் நிழலும் கொண்ட பெரிய மரத்தை அணுக வேண்டும். காலக்கோளாறு காரணமாக பழமில்லாமல் போனாலும் நிழலில்லாமல் போகாது. அதேபோல் பெரியவர்களைத் தஞ்சமடைய வேண்டும்; தாழ்ந்தவர்களை அல்ல. கள்ளுக்கடையில் பாலும் கள் என்றுதானே எண்ணப்படும்?
25. எவன் எதில் தேர்ச்சி பெற்றிருக்கிறானோ அவனை அந்த வேலையில் அமர்த்த வேண்டும். சாஸ்திரங்களை நன்கு கற்றிருந்தாலும் நியமிக்கப்படும் வேலையில் தேர்ச்சியில்லாதவன் தடுமாறுவான்.
26. மனிதன் மனிதனுக்கு அடிமையில்லை; பணத்திற்குத்தான் அடிமை. கௌரவமும், தாழ்மையும் பணசக்தியைப் பொறுத்தேயிருக்கிறது.
27. கண்ணில்லாதவனுக்கு கண்ணாடி உதவாததுபோல் நுண்ணறிவு இல்லாதவனுக்கு சாஸ்திரப்படிப்பு உதவாது.
28. தேவதைகள், குரு, அரசன், பசு, குழந்தைகள், முதியவர்கள் ஆகியவர்களை எக்காரணம் கொண்டும் கோபித்துக்கொள்ளக் கூடாது.
29. யாகம், கல்யாணம், கஷ்ட காலம், எதிரியை அடக்குதல், புகழுக்காகச் செய்யும் காரியம், நண்பர்களைச் சேர்த்துக் கொள்ளுதல், பெண்ணாசை ஆகிய ஏழு விஷயங்களிலும் அதிகமாகச் செலவு செய்யக் கூடாது.
30. கடவுள் உறங்கும்போது எல்லாம் உறங்குகின்றன. அவர் விழித்துக் கொள்ளும் போது, சூரியோதயத்தில் தாமரை மலர்வது போல் எல்லாம் விழித்துக் கொள்கின்றன.