தீட்டுக்காலம் எதற்காக?
சந்திரகௌரி சிவபாலன்
தமிழர்கள் மத்தியில் தீட்டு என்றும் துடக்கு என்றும் விலக்கி வைக்கும் நாட்கள் பல. இந்த நாட்களை நீக்க பூஜை, கிரியைகள் என்றெல்லாம் ஏகப்பட்ட சம்பிரதாயங்கள் நம்மவர் மத்தியில் இருக்கின்றன. எப்போதோ நமது தலையில் அரைக்கத் தொடங்கிய மிளகாய் இப்போதும் அரைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.
முப்பதாவது நாள் நடத்தவேண்டிய கிரியைகளுக்காக இந்தத் தடுப்புநாள் தந்தவர் யார்? கிரியைகள் தேவையா? இவைபற்றி விளக்கமாய்த் தெரிந்து கொள்ள மீண்டும் சுரண்டியது என் மூளை. தேடியது தெளிவுபெற பேனா திறந்தது.
மாதவிடாய்த் தீட்டு
தீட்டு என்னும் சொல், மகளிர் சூதகம், ஆசூசம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. பெண்களுக்கு வருகின்ற மாதவிடாய்க் காலங்கள் தீட்டு வந்த நாட்களாக கருதப்படுகின்றன. இக்காலப் பகுதியில் பெண்கள் கோயிலுக்குச் செல்லும் வழக்கம் இல்லை. அதிகமாக வெளியில் நடமாட மாட்டார்கள். புத்தியைத் தீட்ட வேண்டிய பெண்கள் மூளையில் அடங்கியிருப்பார்கள். அக்காலத்தில் போதிய சுகாதார வசதிகள் குறைந்திருந்த காரணத்தினால் பெண்கள் ஒதுங்கியிருந்தார்களே தவிர ஒதுக்கப்படவில்லை.
இக்காலத்தில் இருப்பது போன்று அக்காலங்களில் போதிய கிருமிநாசினிகள் இருந்ததில்லை. பெண்கள் கைகளில் கிருமிகள் விரைவாக வளரக்கூடிய கூடிய சூட்டுத்தன்மை உள்ளது. பெண்கள் வயிற்றினுள் முட்டையையே கருவாக்கக் கூடிய வெப்பத்தையுடையவர்கள். அதனால் இவர்கள் மூலம் கிருமிகள் இலகுவாகப் பரவக்கூடியதாக இருக்கும். இக்காலங்களில் இவர்களுடைய உடலில் சுரக்கப்படும் ஹார்மோன்கள், மனநிலையிலும் மாற்றங்களைச் செய்வதுடன், ஒருவித எரிச்சல் உணர்வையும் அவர்களுக்கு ஏற்படுத்தும். முதன்முதல் மாதவிடாய் கண்ட பெண்கள். மனநிலையால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அத்துடன் உடல் உபாதைகளும் (அடிவயிற்றில் வலி,கால்கள் நோ, இடுப்பு நோ) இவர்களுக்கு ஏற்படும். இவர்கள் மனஉணர்வு எதிலுமே மனதை ஒட்ட வைக்காது. இந்த உணர்வு கோயிலுக்குச் சென்று ஆண்டவனைத் தரிசிப்பதற்குத் தடையாக இருக்கும்.
அவ்வாறே கோயிலுக்குச் சென்று மற்றையவர்களுக்கும் இவர்களின் உடலில் இருந்து வரும் மனஉணர்வினால் ஏற்படும் அதிர்வுகளும் கோயிலின் ஒருநிலைப்பாட்டு வணக்கமுறையைத் தடைசெய்யும். ஒரு மனிதனின் உடலில் இருந்து வருகின்ற அதிர்வுகள் மற்றைய மனிதர்களைச் சென்றடைகின்றன என்னும் விளக்கம் யாவரும் அறியவேண்டியதே.
இதனாலேயே இந்த கட்டிப்பிடி வைத்தியம், சுவாமிமார்கள் என்று சொல்லப்படும் மனிதர்கள், தமது கையை அடியார்களின் தலையில் வைப்பது, போன்றவையெல்லாம் நடைபெறுகின்றன. எனவே ஒரு மனிதனின் உடலில் இருந்துவரும் அதிர்வுகள் அருகே இருக்கின்ற மனிதர்களைச் சென்றடையும். இதனாலேயே மாதவிடாய்க் காலங்களில் இருக்கின்ற பெண்களினுடைய மனநிலை அதிர்வுகள் ஆலயத்தில் வழிபாடு செய்கின்ற மற்றைய மனிதர்களின் வழிபாட்டைத் தடுக்கக் கூடியதாக இருப்பதனால், இக்காலங்களில் பெண்கள் ஆலயங்களைத் தவிர்த்துக் கொள்வார்கள்.
அத்துடன் சுகாதாரவசதி குறைந்த அக்காலப் பகுதியில் சரியான முறையில் தன்னைச் சுத்தமாக்கி வெளியில் செல்லக் கூடிய வசதி வாய்ப்புக்கள் அக்காலப் பெண்களிடம் இருந்ததில்லை. இதனாலேயே அப்பெண்கள், கோயிலுக்குச் செல்லக் கூடாது என்று சொல்லப்பட்டது. செல்லக்கூடாது என்பதைவிட அப்பெண்கள் தவிர்த்துக் கொண்டார்கள் என்பதே பொருந்தும்.
பிள்ளை பிறந்த வீட்டுத் தீட்டு
அற்புதமான பிஞ்சு உடல் இந்த பூமியில் வந்து பிறப்பெடுக்கின்றது. இந்த உலகமே அதனை வரவேற்கின்றது. பூமித்தாய் வாஞ்சையுடன் தாங்குகின்றாள். மருத்துவர்கள் தாதிகள் முகம் மலர வரவேற்கின்றார்கள். அக்குழந்தையின் உடலை வருடும் இன்பமும் அக்குழந்தை முகம் பார்த்துச் சிரிக்கும் இன்பமும் கவலைகளெல்லாம் பறந்தோடச் செய்யும். ஆனால் அக்குழந்தையைக் கோயிலில் குடிகொண்டிருக்கும் ஆண்டவன் தன்னகம் வரவேற்பதில்லை. 30 நாட்கள் காக்க வைத்தே தன்னிடம் அழைப்பார். அதுவும் அக்குழந்தையில் பிடித்திருக்கும் துடக்குக் கழிய வேண்டும். அதுமட்டுமல்ல இரத்த உறவுகள் யாவரும் கோயிலுக்குத் தூரத்தில் நிற்க வேண்டும். ஏனென்றால், எல்லோருக்கும் பிடித்திருக்கின்றது அத்துடக்கு. இவ்வாறு சலித்துக் கொள்பவர்கள் இன்று நம்மத்தியில் இருக்கின்றார்கள்.
தாயின் சுத்தமின்மை இதற்கும் பொருந்தும். தாயையும் பிள்ளையையும் பிரித்துக் கோயிலுக்குக் கொண்டு போக முடியாது. தாய் உடனடியாக சரியான மனநிலைக்கு வருவதற்கும் எழுந்து நடமாடுவதற்கும் நாளாகும். இவற்றைவிட குழந்தைக்கு இலகுவில் நோய்க்கிருமிகள் தொற்றிக் கொள்ளும். இதனால் இப்பச்சிளம் குழந்தை நோய்க்கு ஆளாகலாம். ஆனால், காலப்போக்கில் மெல்லமெல்ல தாய்ப்பாலிலிருந்து இக்குழந்தை நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுக் கொள்ளும். எனவே இக்குழந்தை உலகத்தோடு தன்னை இணைத்துக் கொள்ள நாட்கள் எடுக்கும். இதனாலேயே வெளியில் குழந்தைகளைக் கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டது. வெளியிலிருந்து வீட்டிற்கு வருபவர்களும், வீட்டில் இருந்து வெளியில் செல்பவர்களும் ஆசையுடன் இக்குழந்தையைத் தூக்கி முத்தம் கொடுக்கும் போதும் வெளியில் இருந்து கொண்டு சேர்க்கும் நோய்க் கிருமிகள் இக்குழந்தையை வந்தடைவதுடன் இக்குழந்தைக்குப் பாதிப்பும் ஏற்படும்.
இந்தக் காரணத்தினாலேயே இவ்வீட்டில் இருப்பவர்களுக்கும் கட்டுப்பாடு விதித்து துடக்கு வீட்டுக்காரர் என்று பட்டமும் கொடுக்கப்படுகின்றது.
இன்னும் ஒருவிடயம் ஒலியைக் கடத்துவதற்கு உதவும் குழந்தையின் செவிப்பறை மென்சவ்வு மிகவும் மென்மையாக இருக்கும். கோயிலுக்குக் குழந்தையைக் கொண்டு செல்லும் போது ஆலயங்களில் ஒலிக்கும் மணிச்சத்தங்கள், மேளவாத்தியங்கள் போன்றவற்றிலிருந்து வரும் பலத்த ஒலியலைகள் குழந்தையில் செவிப்பறையைப் பழுதுபடுத்தி விடும். இக்காரணத்தினாலுமே கோயிலுக்கு குழந்தையைக் கொண்டு செல்லும் வழக்கம் தடைப்படுத்தப்பட்டது.
இவ்வாறான காரணங்களினாலேயே அக்கால மக்கள் துடக்கு என்ற நாட்களைத் தடுப்பு நாட்களாகப் பயன்படுத்தினார்கள். இது புரிந்த பின்னும் கிரியைகள் (சடங்குகள்) தேவையா?
இறப்பு வீட்டுத் தீட்டு
ஒரு வீட்டில் ஒருவர் இறந்தால், அவருடைய குடும்பத்தினர், இரத்த உறவினர்களுக்குத் துடக்கு.
ஒருவர் ஒரு வீட்டில் இறந்து விட்டால், அவ்வீட்டிலுள்ள அவருடைய குடும்பத்தாருக்கும், அவருடைய இரத்த உறவினர்களுக்கும் துடக்கு வந்துவிடுவதாகவும் அவர்கள் கோயிலுக்குச் செல்ல முடியாது என்பதும் வழக்கமாக இருக்கின்றது. அந்த வீட்டிற்கு வருபவர்கள் யாவரும் அவ்வீட்டில் நீரருந்தக் கூடாது என்பதும், அவ்வீட்டிற்கு வந்து சென்றால், தலைமுழுக வேண்டும் என்பதும் நியதியாக இருந்தது. வெளிநாட்டில் இருந்தால் கூட உறவினர்கள் கோயிலுக்குச் செல்ல மாட்டார்கள். அந்த உறவினர்கள் வீட்டிற்குச் செல்பவர்கள் கூட குளித்து முழுகியே அடுத்த கருமங்களைச் செய்வார்கள். உறவுகள் எங்கிருந்தாலும் அன்பும் பாசமும் ஒன்றுதான். அருகாமையிருந்து பெறும் பாசத்தைப் போல் சேய்மையிலிருந்து நாளும் எண்ணி ஏங்கும் பாசமும் வலிமை மிக்கதே. சொந்தங்கள் மீளாப்பிரிவில் சென்று விட்டால், அத்துயரை ஈடுசெய்யவொண்ணாக் கவலையில் கலந்திருக்கும் சொந்தங்கள் வாடித்துயருறுவதும் இயற்கையே.
மனிதனின் உடலிலே சுரக்கப்படுகின்ற பெரமோன என்னும் ஒரு சுரப்பானது மனிதனுடைய வியர்வை அல்லது அவருடைய தனிப்பட்ட நறுமணத்தை ஏற்படுத்தக் கூடிய தன்மையுள்ளது. இந்தத் திரவமே ஒருவருக்கொருவர் காதல் உணர்வு ஏற்படுவதற்கும் காம உணர்ச்சி ஏற்படுவதற்கும், காரணமாக அமைகின்றன. இத்திரவத்தை மூளையிலுள்ள அமிக்டாலா உணர்ந்து கொள்ளும். இந்த அமிக்டாலாவானது மூளையின் உச்சியில் வலது இடது பக்கங்களில் அமைந்திருக்கின்றன. இது நாம் உணராமலேயே பெரமோனாவை அறிந்து கொள்ளும். பிரிவுத்துயரில் இருக்கும் ஒருவருடைய உடலிலே ஏற்படும் நறுமண மாற்றத்தை, அருகே இருப்பவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் அமிக்டாலா தொழிற்படும். இதனால், இவர்களை நாடிச் செல்பவர்களின் உணர்வுகளிலும், சிந்தனையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். எனவேதான் அவ்வீட்டிற்குச் செல்பவர்களும் அவர்கள் வீட்டிற்குத் திரும்பியவுடன் குளித்து முழுகித் தத்தம் காரியங்களில் ஈடுபடுகின்றார்கள்.
குளிப்பதன் காரணம் யாதெனில், நீரானது ஒலியைக் கடத்த வல்லது. அதிலிருக்கும் மூலக்கூறுகள் எண்ண அலைகளையும் கடத்தக்கூடியது. இறந்தவரின் சம்பந்தமுள்ள உறவுகளின் எண்ண அலைகளினால் பாதிப்புற்றவர்களின் எண்ணங்களை நீரலை கொண்டு நீக்குவார்கள். நீக்கம் சக்தியும் நீருக்கு உண்டு. அதனாலேயே செப்புப் பாத்திரத்தில் நீர் எடுத்து மந்திரங்களை எமது சுவாமிமார் ஓதிக் கொடுக்கின்றார்கள். நீருக்குள்ள சக்தியே அது. அத்துடன் செப்புப் பாத்திரம் மின்சக்தியைக் கடத்தும் அல்லவா. நாம் நீரில் கூறும் சொற்கள் வலிமைமிக்கவை. எனவே தான் நீரால் தமக்குள்ளாய் நிரம்பியிருக்கும் கவலையலைகளைக் கழுவித் துடைக்கின்றார்கள்.
அடுத்து இந்தத் துடக்கு நீங்குவதற்கு 30 நாள்கள் கடக்க வேண்டும் என்னும் விடயத்திற்கு வருகின்றேன். நம்மவர்கள் சந்திரனின் வளர்ச்சி 14 நாட்கள் தேய்வு 14 நாட்கள் என்னும் 28 நாள்க் கணக்கையே எல்லாவற்றிற்கும் வைத்திருக்கின்றார்கள். அதனாலேயே அது 31 நாள்கள் ஆகியது. இதில் பொற்கொல்லர், பிராமணர் போன்றோர்க்கு 16 நாட்களில் தொடக்குக் கழிப்பார்கள். இவர்கள் கோயில்களில் பூசை செய்பவர்கள். இது மனிதனால், காலம்காலமாகக் கொண்டுவரப்பட்ட வழக்கம். இவர்கள் ஒருநிலைப்படுத்தும் பயிற்சி மூலம், தாமாகவே தம்மை கட்டுப்படுத்தும் தன்மையைப் பெற்றிருப்பார்கள். இதனால் மிகக் குறுகிய காலப்பகுதியில் மீண்டும் வாழ்வியலுக்குள் தம்மை ஈடுபடுத்தும் தன்மை இவர்களுக்குள் இருக்கின்றது. இதனாலேயே இவர்கள் குறைந்த நாட்களில் துடக்கு நீங்குபவர்களாகக் கருதப்படுகின்றார்கள். தம்மைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் தமது மனநிலையில் உடனடித் திருத்தத்தைக் கொண்டுவர முடியாதவர்கள் எப்படி 16 நாட்களில் துடக்கு நீங்குபவர்களாக கருத முடியும்.
இதை விடுத்து துடக்கு என்பது அவரவர் உடல் எண்ணங்களின் தொழிற்பாடே என்பதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் நமக்கு இருந்து விட்டாலே துடக்கு நம்மைவிட்டுத் தூரப் போய்விடும். புரியாத மந்திரங்களால் பலனளிக்காத கிரியைகளால் நாம் என்ன பலனைப் பெறப் போகின்றோம்? என்று நாம் புரிந்து கொள்வதால் மட்டுமே நாம் பலனைப் பெற்றுக் கொள்வோம்.
ஏனென்ற கேள்வி கேட்காது விட்டால்
மடையன் நீயென்று ஆக்கிடும் உலகு
ஆமென்று எதற்கும் தலையாட்டிவிட்டால்
தலையில் ஏனிந்த மூளை இடம்பிடிக்க வேண்டும்?
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.