மனித வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் கிறிஸ்து நம்மோடு உறவு கொண்டு, நம்மை அருள் வாழ்வில் வளரச் செய்கிறார். தம் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு ஆகிய பாஸ்கா மறைநிகழ்ச்சியில் நாம் பங்கேற்கச் செய்கிறார். இவ்வாறு மனித வாழ்வின் முக்கிய கட்டங்களில் கிறிஸ்து ஆற்றும் செயல்களே திருவருள்சாதனங்கள் ஆகும்.
* திருவருள்சாதனம் என்றால் என்ன?
அருள் வாழ்வைக் குறித்துக் காட்டவும், அதனை வழங்கவும், கிறிஸ்து ஏற்படுத்திய நிலையான அடையாளமே திருவருள்சாதனம் ஆகும்.
* திருவருள்சாதனங்கள் எத்தனை?
ஏழு. அவை;
1. திருமுழுக்கு
2. உறுதிப் பூசுதல்
3. நற்கருணை
4. ஒப்புரவு
5. நோயில் பூசுதல்
6. குருத்துவம்
7. திருமணம்
* திருவருள்சாதனங்கள் வழியாக நாம் என்ன பெறுகிறோம்?
திருவருள்சாதனங்கள் வழியாக நாம் அருள்வாழ்வைப் பெறுகிறோம்.
* திருமுழுக்கு என்றால் என்ன?
பிறப்புநிலைப் பாவத்தையும் செயல்வழிப் பாவத்தையும் போக்கி, கிறிஸ்துவோடு நம்மை இணைத்து, கடவுளின் பிள்ளைகளாகவும் திருச்சபையின் உறுப்பினர்களாகவும் ஆக்குகின்ற அருள்சாதனமே திருமுழுக்கு ஆகும்.
* உறுதிப் பூசுதல் என்றால் என்ன?
தூய ஆவியாராலும் அவருடைய கொடைகளாலும் நம்மை நிரப்பி, திருச்சபையின் பணிகளில் கடமை உணர்வோடு ஈடுபட நமக்கு ஆற்றலைத் தருகிற அருள்சாதனமே உறுதிப்பூசுதல் ஆகும்.
* தூய ஆவியார் நமக்கு எவ்வாறு உதவுகிறார்?
நம்பிக்கையில் நாம் உறுதியாய் நிலைத்திருக்கவும், கடவுள் மேல் நிறைவான அன்பு கொண்டு வாழவும், கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக விளங்கவும், தம் கொடைகளை வழங்கி நமக்கு உதவுகிறார்.
* தூய ஆவியாரின் கொடைகள் யாவை?
1. ஞானம்
2. மெய்யுணர்வு
3. அறிவுரைத் திறன்
4. நுண்மதி
5. ஆற்றல்
6. இறைப்பற்று
7. இறையச்சம்
* தூய ஆவியார் விளைவிக்கும் கனிகள் யாவை?
1. அன்பு
2. மகிழ்ச்சி
3. அமைதி
4. பொறுமை
5. பரிவு
6. நன்னயம்
7. நம்பிக்கை
8. கனிவு
9. தன்னடக்கம்
10. பணிவு நயம்
11. தாராள குணம்
12. நிறை கற்பு
* நற்கருணை என்றால் என்ன?
அப்ப இரச குணங்களுக்குள், இயேசு கிறிஸ்துவின் திருஉடலும் திருஇரத்தமும் அவருடைய இறை இயல்பும் மனித இயல்பும் அடங்கி இருக்கிற அருள்சாதனமே நற்கருணை ஆகும்.
* இயேசு எப்பொழுது நற்கருணையை ஏற்படுத்தினார்?
இயேசு தமது இறுதி இரவு உணவின்போது நற்கருணையை ஏற்படுத்தினார்.
* இயேசு எவ்வாறு நற்கருணையை ஏற்படுத்தினார்?
தாம் கையளிக்கப்பட்ட இரவில், இயேசு அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, அதைப் பிட்டு, தம் சீடருக்கு அளித்துக் கூறியதாவது: அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள்; ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே, உணவு அருந்தியபின், கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, தம் சீடருக்கு அளித்து அவர் கூறியதாவது: அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள்; ஏனெனில், இது புதிய, நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம். இது பாவ மன்னிப்புக்கு என்று உங்களுக்காகவும் எல்லாருக்காகவும் சிந்தப்படும். இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
இவ்வாறு இயேசு நற்கருணையை ஏற்படுத்தினார்.
* திருப்பலியில் இது எவ்வாறு நிறைவேறுகிறது?
திருப்பலியில் அப்பம் கிறிஸ்துவின் திருஉடலாகவும், திராட்சை இரசம் அவருடைய திருஇரத்தமாகவும் மாறுகின்றன.
* இயேசு நற்கருணையை ஏன் ஏற்படுத்தினார்?
இறைமக்களின் ஆன்ம உணவாகவும், தம்முடைய பாடுகள், இறப்பு, உயிர்ப்பு இவற்றின் நினைவாகவும், தாம் நம்முடன் இருப்பதை உணர்த்தும் அருள்சாதனமாகவும் இயேசு நற்கருணையை ஏற்படுத்தினார்.
* நற்கருணை வாங்குவோர் எந்த நிலையில் இருக்க வேண்டும்?
பாவ நிலையில் இல்லாமல், கடவுளோடும் தம் சகோதரர் சகோதரிகளோடும் நல்லுறவில் நிலைத்திருக்க வேண்டும்.
* திருப்பலியின் இரு பெரும்பகுதிகள் யாவை?
1. இறைவாக்கு வழிபாடு
2. நற்கருணை வழிபாடு
* திருப்பலியில் பங்கேற்பது எவ்வாறு?
வெறும் பார்வையாளர்கள் போல் இராமல், திருப்பலியில் முழுமையாகப் பங்கேற்க வேண்டும். இறைவார்த்தையைக் கவனமுடன் கேட்டு, திருச்சடங்குகளில் ஒன்றித்து, இறை வேண்டல்களிலும் பாடல்களிலும் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும்.
* ஒப்புரவு அருள்சாதனம் என்றால் என்ன?
திருமுழுக்குப் பெற்ற பின் நாம் செய்யும் பாவங்களை எல்லாம் போக்கி, நம்மைக் கடவுளோடும் பிறரோடும் மீண்டும் இணைக்கிற அருள்சாதனமே ஒப்புரவு ஆகும்.
* ஒப்புரவு அருள்சாதனத்தில் பங்குபெறும் முறை யாது?
1. செய்த பாவங்களை நினைவுக்குக் கொண்டுவருதல்.
2. அவற்றிற்காக மனம் வருந்துதல்.
3. இனிமேல் பாவம் செய்வதில்லை எனத் தீர்மானித்தல்.
4. குருவிடம் பாவங்களை மறைக்காமல் அறிக்கையிடுதல்.
5. பாவப் பரிகாரமாகவும், பாவ மன்னிப்பிற்கு நன்றியாகவும் குரு கொடுத்த கட்டளையை நிறைவேற்றுதல்.
* நோயில்பூசுதல் என்றால் என்ன?
நலம் தரும் மருத்துவராகிய கிறிஸ்துவைச் சந்திக்க வைத்து, நம் பாவங்களையும் அவற்றிற்கு உரிய தண்டனைகளையும் போக்கி, நம்மை விண்ணக வாழ்விற்குத் தயாரிக்கிற அருள்சாதனமே நோயில்பூசுதல் ஆகும்.
* குருத்துவம் என்றால் என்ன?
திருப்பலி மற்றும் திருவருள்சாதனங்களை நிறைவேற்றவும், நற்செய்தி அறிவிக்கவும், இறைமக்களை வழிநடத்தி உருவாக்கவும் உரிமை அளிக்கிற அருள்சாதனமே குருத்துவம் ஆகும்.
* திருமணம் என்றால் என்ன?
ஆணையும் பெண்ணையும் கணவன் மனைவியாக இணத்து, அவர்கள் ஒருவர் ஒருவரை இறுதிவரை அன்பு செய்யவும்,தம் பிள்ளைகளைக் கிறிஸ்தவ நெறியில் வளர்க்கவும், இல்லத் திருச்சபையை உருவாக்கவும் இறையருளை அளிக்கிற அருள்சாதனமே திருமணம் ஆகும்.