இயேசு கிறிஸ்து கி.பி. சுமார் 33 ஆம் ஆண்டில் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் விதமாக கிறிஸ்தவர்களால் உயிர்ப்பு ஞாயிறு (Easter), ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா அல்லது ஆண்டவரின் பாஸ்கா என்று கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் தவக்காலத்தின் முடிவில் வருகிறது. இது கிறிஸ்தவத் திருவழிபாட்டு ஆண்டின் மிக முக்கியமான திருநாளாகும். இந்நாள் புனித வெள்ளியில் இருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில், இது புனித வாரத்தின் நிறைவாகக் கொண்டாடப்படுகிற மிக முக்கியமான திருவிழாவாக உள்ளது.
பாஸ்கா என்ற அரமேய மொழிச் சொல்லுக்கு, ‘கடந்து போதல்’ என்று பொருள். இது இஸ்ரேல் மக்கள் எகிப்தில் இருந்து மீட்பு பெற்றதன் நினைவாக கொண்டாடப்படும் யூதப் பெருவிழா ஆகும். புதிய ஏற்பாட்டில் "நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்" (1 கொரி 5: 7 ) என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார். ஆகவே பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கும் பாஸ்கா பெருவிழா என்பது இயேசுவின் சாவையும் உயிர்ப்பையும் குறிக்கும் முன்னறிவிப்பாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். எனவே அவர்கள் இயேசு உயிர்த்தெழுந்த நாளை புதிய பாஸ்கா பெருவிழாவாகக் கருதுகின்றனர்.
உயிர்ப்புத் திருநாளைக் கணக்கிடுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வந்தன. ஏனெனில், எபிரேய நாட்காட்டியின் படி இயேசு, நிசான் மாதம் 14 ஆம் நாளன்று சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாளான நிசான் மாதம் 16 ஆம் நாளன்று உயிர்த்தெழுந்தார். இதன்படி கணக்கிட்டால் புனித வெள்ளியும், உயிர்ப்பு ஞாயிறும் ஆண்டுதோறும் வெவ்வேறு கிழமைகளில் வரும். ஆகவே கி.பி. 325 ஆம் ஆண்டு குழுமிய முதல் நைசீய பொதுச்சங்கம், மார்ச் மாதம் வரும் சம இரவு நாளான 21 ஆம் தேதிக்குப் பின்வரும் முழு நிலவு நாளிலோ அல்லது அதற்கு பிறகோ வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையே உயிர்ப்புத் திருநாள் என்று அறிவித்தது. அதைப் பின்பற்றி மேற்கு மற்றும் கிழக்கு கிறிஸ்தவர்கள் உயிர்ப்புப் பெருவிழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.