கிறிஸ்துமசு கிராமம் என்பது ஒரு மிகச்சிறிய அளவிலான அலங்காரக் கிராமமாகும், இது பெரும்பாலும் கிறிஸ்துமசு காலத்தில் அமைக்கப்படுகிறது. இந்தக் கிராமங்கள் புராட்டஸ்டன்ட் பிரிவான மொராவியன் தேவாலயத்தின் பாரம்பரியமான கிறிஸ்துமசு மரபுகளில் வேரூன்றியுள்ளன. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் நடுப்பகுதியிலும் அமெரிக்காவில் பெருமளவில் தயாரிக்கப்பட்ட அட்டை கிறிஸ்துமசு கிராமங்கள் பிரபலமடைந்தன, அதே நேரத்தில் பீங்கான் பதிப்புகள் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரபலமாகின.
கிறிஸ்துமசு மரத்தைச் சுற்றி அமைக்கப்படும் அலங்காரக் கிறிஸ்துமசு கிராமங்களின் பாரம்பரியம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மொராவியன் தேவாலயத்தின் விடுமுறை மரபுகளில் வேரூன்றியுள்ளது. இது சலேம், வட கரோலினா மற்றும் பென்சில்வேனியாவின் பெத்லகேமில் ஆரம்பகால குடியேற்றங்களைக் கொண்ட ஒரு புராட்டஸ்டன்ட் பிரிவாகும். "இது வழக்கமாக விலங்குகளுடன் கூடிய ஒரு விரிவான நிலப்பரப்பின் வடிவத்தை கொண்டிருக்கும், பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது குறிப்பிடப்படாத உயிரினமாகவோ அல்லது நோவாவின் பேழையில் பயணித்த அல்லது பயணிக்காத உயிரினமாகவோ இருக்கலாம். வழக்கமான பெட்சு என்பது விவிலியத்தின் வரம்புகளை மீறியதாக இருந்தாலும் தூய்மையான, உற்சாகமான வகையாக இருக்கும்" என்கிறார் கரல் ஆன் மார்லிங்.
இவை ஒரு முன்ணணை காட்சியை விட அதிகமாக தொழில்நுட்பங்கள் கொண்டு இயங்குறு காட்சிகளை உள்ளடக்கியதாக வளர்ந்தன. அதாவது, வேலை செய்யும் மாவு ஆலைகள், குதிக்கும் நாய்கள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் மின்சார ரயில்களுடன் ஓடும் நீர் போன்ற இயங்குறு காட்சிகள் ஒரு முழு அறையையும் நிரப்பக்கூடிய வகையில் அமைக்கப்படும். குடும்பங்கள் "பெட்சு காட்சிகளை" ஏற்பாடு செய்து சிறந்த நிகழ்ச்சிக்கு போட்டியிடும். இந்தச் சொல் ஜெர்மன் வினைச்சொல் பெட்சினில் இருந்து பெறப்பட்டது, இதன் பொருள் "சுத்தம் செய்வது" அல்லது "அலங்கரிப்பது" என்பதாகும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பல ஜப்பானிய நிறுவனங்கள் அட்டை அல்லது காகித வீடுகள், தேவாலயங்கள் மற்றும் பிற கட்டிடங்களை பெருமளவில் உற்பத்தி செய்யத் தொடங்கின. இந்தச் சிறியக் கட்டிடங்கள் வழக்கமாகப் பின்புறம் அல்லது கீழே துளைகளைக் கொண்டிருந்தன, இதன் மூலம் கிறிஸ்துமசு விளக்குகள் வெளிச்சத்தை அளித்தன. கட்டிடங்கள் சிறிய வண்ண செலோபேன் (காகிதம் போன்ற பொதியும் பொருள்) சன்னல்களைக் கொண்டிருந்தன, மேலும் பனியின் தோற்றத்தைக் கொடுப்பதற்காக மைக்கா - தூசி நிறைந்த கூரைகளால் அலங்கரிக்கப்பட்டன. இந்தக் கட்டிடங்கள் மலிவான பொருட்களால் ஆனவை மற்றும் அமெரிக்கா முழுவதும் பரவலாகக் கிடைத்ததால், அவை மிகவும் பிரபலமான கிறிஸ்துமசு அலங்காரமாக மாறியது.
1970 களில், மட்பாண்டம் அல்லது பீங்கான் கிறிஸ்துமசு கிராமங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமடையத் தொடங்கின. இந்தக் கட்டிடங்களை உருவாக்கிய முதல் நிறுவனங்களுள் டிபார்ட்மெண்ட் 56 (Department 56) ஒன்றாகும், மேலும் இது மிகவும் பிரபலமான ஒன்றாகும். லெமக்சு (Lamex) போன்ற பிற நிறுவனங்களும், இதே போன்ற கிராமங்களை உற்பத்தி செய்துள்ளன. மேலும் ஏராளமான பிற நிறுவனங்களின் தயாரிப்புகளும் விற்கப்படுகின்றன. ஐரோப்பாவில், லூவில் (Louville) மற்றும் டிக்கன்சுவில்லி (Dickensville) ஆகிய நிறுவனங்களும் நிறுவப்பட்டது.
கிறிஸ்துமசு கிராமக் கட்டிடங்கள் வழக்கமாக நிலையான அளவில் செய்யப்படுவதில்லை. ஒரு தேவாலய கட்டிடம் உண்மையில் ஒரு சாதாரண வீட்டின் உயரத்தை விடப் பத்து மடங்கு அதிகமாக இருக்கும், ஆனால், இது மிகவும் சிக்கலான மாதிரிகளை உடைய விந்தையான கிறிஸ்துமசு கிராமக் காட்சியாக இருக்கும். எனவே, இந்தக் கிறிஸ்துமஸ் கிராமம் ஒரு தேவாலயக் கட்டிடம் வீட்டை விடக் கட்டாயம் உயரமாக இருக்க வேண்டும், என்கிற அந்தஸ்தை சுமத்துகிறது.
பல கிறிஸ்துமஸ் மரபுகளைப் போலவே, விடுமுறையில் கிராமங்களை அமைத்து கொண்டாடுவது என்ற கருத்து மற்ற விடுமுறை நாட்களிலும் பரவியது, ஒரு சில நிறுவனங்கள் ஹாலோவீன் மற்றும் இயேசு நாதர் உயிர்த்தெழுந்த திருநாள் கிராமங்களை உருவாக்குகின்றன.