திருமண் (திருநாமம்) வைணவர்களால் இட்டுக் கொள்ளப்படும் புனிதமான வைணவச் சமயச் சின்னமாகும். இந்தச் சின்னம் உருமாறிய அபிரகம் (வெள்ளை நிறத்தின் சின்னம்) மற்றும் மஞ்சள் காப்பு அல்லது மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு கலந்து உருவான ஸ்ரீசூரணம் (மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தின் கோடு) கொண்டு இட்டுக் கொள்ளப்படுகிறது. இதைத் திருமண் காப்பு தரித்தல் என்று வைணவர்கள் குறிப்பிடுகின்றனர்.
வைணவத்தின் முழுமுதற் கடவுளான ஸ்ரீமன் நாராயணனின் பாதங்களைக் குறிப்பது திருமண் என்னும் திருநாமம் ஆகும். வைணவ ஆதார தத்துவம் நாராயணன் ஒருவனே பரமபுருசன். சீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பதாகும். திருமண்ணை ஸ்ரீசூர்ணம் என்றும் அழைக்கிறார்கள். ஸ்ரீசூர்ணம் மகாலட்சுமியின் அடையாளமாகும். இந்தத் திருமண் புனிதமான இடங்களிலிருந்து சேகரிக்கப்படுகிறது. எப்படி உவர் மண்ணானது நம் ஆடையினைத் தூய்மைப்படுத்துகிறதோ, அவ்வாறே திருமண்ணும் வைணவனின் உள்ளத்தைத் தூய்மையாக்குகிறது. வைணவத்தின் இரகசியத் தத்துவம் உணர்த்துவது என்னவெனில், ‘திருமண் ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்கள் ஆகும். என்றாவது ஒரு நாள் உடம்பு மண்ணோடு மண்ணாகிப் போகும். எனவே ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள்‘ என்று அறிவுறுத்துவது திருமண் காப்பாகும்.
வைணவ நடைமுறையில் வடகலை, தென்கலை என்ற இருவேறு பிரிவுகள் உண்டு. வடகலை வைணவத்தினர், மர்கட நியாயப்படி ஸ்ரீமன் நாராயணனைச் சரணாகதி அடைகின்றனர். பெருமாளை விடாபிடியாகப் பக்தன் பிடித்துக் கொள்ள வேண்டும். பிடித்துக் கொள்ளாவிடில் அவன் கருணை வைணவனுக்குக் கிடைப்பதில்லை. பிடித்துக் கொண்ட பின்னரே, பெருமாளின் அருட்கரங்கள் அவர்களைக் காக்கின்றன என்பது வடகலை வைணவர்கள் நம்பிக்கை.
திருமண் இட்டுக் கொள்வதில் "வடகலை", "தென்கலை" என இரண்டு யோக முறைகள் உண்டு. பாதம் வைத்துப் திருமண் போடும் வழக்கம் தென்கலை நாமம் எனப்படும். பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம் (நெற்றியில் நேர்கோடு போடுவது - நாமம்) எனப்படும்.
நாராயணனின் பன்னிரண்டு பெயர்களைக் குறிக்கும் வகையில் பன்னிரண்டு இடங்களில் திருமண் காப்பு இட்டுக் கொள்வது வைணவர்கள் நடைமுறையாக இருக்கிறது.
1. நெற்றி
2. மார்பு (மார்பு)
3. வயிறு (நாபி)
4. கழுத்து
5. வலது வயிற்றில்
6. வலது தோள்பட்டை
7. வலது கழுத்து
8. இடது வயிற்றில்
9. இடது தோள்பட்டை
10. இடது கழுத்து
11. பின்புறம் அடிமுதுகு
12. பின்புறம் பிடரி
திருமண் காப்பும் ஸ்ரீசூர்ணமும் தரிக்கும் போது சொல்ல வேண்டிய பெருமாளின் நாமங்கள்;
“கேசவாய நம என்று நெற்றியிலும்
நாராயணாய நம என்று நாபியிலும்
மாதவாய நம என்று மார்பிலும்
கோவிந்தாய நம என்று நெஞ்சிலும்
விஷ்ணுவே நம என்று வலது மார்பிலும்
மதுசூதனாய நம என்று வலது புயத்திலும்
திரிவிக்ரமாய நம என்று வலது தோளிலும்
வாமனாய நம என்று இடது நாபியிலும்
ஸ்ரீதராய நம என்று இடது புயத்திலும்
ஹ்ருஷீகேசாய நம என்று இடது தோளிலும்
பத்மநாபாய நம என்று அடிமுதுகிலும்
தாமோதராய நம என்று பிடரியிலும்
திருமண் தரித்துக் கொள்ள வேண்டும்”