இறைவனை அடையக் கூடிய நான்கு யோக வழிமுறைகளில் பக்தி யோகம் ஒன்றாகும். இவை தவிர, கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம் போன்ற யோக முறைகளும் உள்ளன. இந்தப் பக்தி யோகம் குறித்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பகவத்கீதையில் அர்ச்சுனனுக்கு அத்தியாயம் 12 இல் விளக்கமாக எடுத்துரைக்கிறார். பக்தியோகம் என்பது ஐந்து வகையான சாதனங்களின் தொகுப்பாகும்.
1. பற்றுடன் கூடிய பக்தி
2. பற்றில்லாமல் கூடிய பக்தி
3. சகுன உபாசன (தியானம்) பக்தி
4. நிர்குண உபாசன (தியானம்) பக்தி
5. ஞானயோக பக்தி
பற்றுடன் கூடிய பக்தி
பக்தன் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, இறைவன் மீது பக்தி செலுத்துதல் என்பது காம்ய பக்தியாகும்.
பற்றில்லாமல் கூடிய பக்தி
பக்தன் தனது நன்மைக்கு அன்றி உலக நன்மைக்காக, இறைவன் மீது செய்யும் பக்திக்கு நிஷ்காம்ய பக்தியாகும்.
சகுண உபாசன (தியானம்) பக்தி
பக்தன் பெயர், உருவத்துடன் கூடிய இறைவனை மனதில் நிலைநிறுத்திச் செய்யும் (தியானத்தை) பக்திக்கு சகுண பிரம்ம உபாசனையாகும்.
நிர்குண உபாசன (தியானம்) பக்தி
பக்தன் பெயர், உருவம் அற்ற பிரம்மத்தை மனதில் நிலைநிறுத்திச் செய்யும் (தியானத்தை) பக்தியே நிர்குண உபாசனையாகும்.
ஞான யோக பக்தி
பக்தன் தனது குரு மற்றும் வேதாந்த சாத்திரங்களின் துணை கொண்டு, வேதாந்த அறிவினால் பிரம்மத்தை அடையும் ஞானத்திற்கு ஞானயோக பக்தியாகும். இந்த பக்தியானது பராபக்தி எனப்படும்.
பக்தி யோகத்தின் சிறப்பு
* மனதை வேறு எதிலும் நாட்டம் இல்லாமல் சீவனில் ஆத்மாவாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் பிரம்மத்தில் மனதை லயித்து கொண்டிருப்பவர் அடையும் பேரானந்தத்தை, புலனுகர் போகங்களில் ஈடுபட்டுள்ளவன் அடைய முடியாது.
* எந்த விருப்பமும் இல்லாதவன், பொறிகளை அடக்கியவன், சாந்தமும், சமபுத்தியும் வாய்க்கப் பெற்றவன்; பிரம்மத்திலேயே மனதை நிலைநிறுத்தி நிறைவோடு இருப்பவன் எவனோ, அவனுக்கு எல்லாம் சுகமாகவே இருக்கும்.
* பகவானிடத்தில் மனதை செலுத்தியிருப்பவன், பிரம்ம பதவியோ, சுவர்க்கத்தின் இந்திரப் பதவியோ, பூமண்டலப் பதவியோ, அல்லது பாதாளம் உள்ளிட்ட கீழ் லோகங்களையும் கூட விரும்பாது; அவன் பகவானிடத்தில் சரண் அடைந்து விட்டதால் பகவானைத் தவிர வேறு எதனையும் விரும்ப மாட்டான்.
* யோகம், சாங்கியம், தர்மானுஷ்டானம், வேதாத்யயனம், தவம், தியாகம் ஆகியவைகள் பகவானிடத்தில் பக்தி செலுத்துவதால் கிடைக்கும் சுகத்தை விட ஈடானது அல்ல.
* நம்பிக்கையுடன் கூடிய பக்தியால் மட்டும் பகவானை அடைய முடியும். பகவான், சான்றோர்களுக்குப் பிரியமானவன்; அவர்களின் ஆத்மாவாக இருப்பவன்; பிறப்பினால் சண்டாளனாக இருப்பினும் பகவானிடத்தில் செலுத்தப்படும் உறுதியான பக்தியினால் புனிதமடைகிறான்.
* சத்தியம், தயை, தவம், நற்கல்வி இவைகள் உடையவனாக இருப்பினும், பகவானிடத்தில் பக்தியற்றவன் மேற்கூறியவைகள் அவனை பரிசுத்தப்படுத்துவது இல்லை.
* பகவானிடத்தில் நிறைவான பக்தியுடையவன் சொல்லில் தடுமாற்றம் ஏற்படுகிறது. மனம் கசிந்து உருகுகிறது. சில நேரங்களில் அழுகிறான், சிரிக்கிறான், வெட்கத்தை விட்டு உரக்கப் பாடுகிறான். அவ்வாறு ஆடுகிற பக்தன் உலகத்தையேப் புனிதப்படுத்துகிறான்.
* பகவானிடத்தில் பக்தி செலுத்துதல் என்ற பக்தி யோகத்தால் கர்மவாசனையிலிருந்து நீங்கி, தன் இயல்பு வடிவான பரமாத்மாவை அடைகிறான்.
* பொய்யான பொருட்களைப் பற்றிச் சிந்திப்பதை விட்டு, மெய்ப்பொருளான பிரம்மம் எனும் பகவானைப் பற்றியேச் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். மனதைப் பிரம்மத்தில் நிலை நிறுத்துவதே பக்தி யோகத்தின் சிறப்பாகும்.
பக்தி யோகத்தின் பலன்கள்
இறைவன் மீது நம்பிக்கையுடன் கூடிய தளராத பக்தி செலுத்துவதால், ஒரு சீவன் வாழம் பொழுதே, சீவ முக்தியும் (மன நிறைவு), சீவனின் உடல் அழிந்த பின் விதேக முக்தி அடைந்து, சீவாத்மா, பரமாத்மாவுடன் கலப்பதே பக்தி யோகத்தின் பலனாகும்.